கர்நாடகத்திலும் மாவோயிஸ்டுகள் அட்டகாசம்:அரசு பஸ் தீவைத்து எரிப்பு
ஷிமோகா:
கர்நாடக மாநிலம் ஹொசகட்டே என்ற இடத்தில் மாவோயிஸ்ட் நக்சலைட் தீவிரவாதிகள் அரசுப் பேருந்தை தீவைத்துக் கொளுத்தினர்.
இன்று அதிகாலை ஷிமோகா மாவட்டம் ஆகும்பே என்ற இடத்திலிருந்து சிக்மகளூருக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஹொசகட்டே- தல்லூரங்கடி வனப் பகுதியில், அந்தப் பேருந்தை எட்டு பேர் கொண்ட மாவோ நக்சலைட் கும்பல் தடுத்து நிறுத்தியது.
பின்னர் பேருந்து இயக்குநர், நடத்துனர் மற்றும் பயணிகளை கீழே இறங்குமாறு உத்தரவிட்டனர். அனைவரும் இறங்கிய பின்னர் பேருந்துக்கு தீவைத்துக் கொளுத்தினர்.
கர்நாடக அரசை எதிர்த்து அப்போது நக்சலைட்டுகள் கோஷமிட்டனர். மேலும், நக்சலைட்டுகள் குறித்து சமீபத்தில் கர்நாடக அரசு வெளியிட்ட பட்டியலுக்கும் நக்சலைட்டுகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இந்த தாக்குதலை அதே பேருந்தில் வந்த பி.ஜி.கிருஷ்ணமூர்த்தி, பிரபா ஆகியோர்தான் தலைமை தாங்கி நடத்தியதாக கூறப்படுகிறது. கிருஷ்ணமூர்த்தி ஹொசகட்டேவைச் சேர்ந்தவர், பிரபா சிருங்கேரியைச் சேர்ந்தவர்.
இந்த சம்பவத்திற்கு கர்நாடக துணை முதல்வர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வெறிச் செயலுக்கு நக்சலைட்டுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் படித்த மேதாவிகள் கண்டனம் தெரிவிப்பார்கள், ஆதரிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார் எடியூரப்பா.