சேலம் ரயில் கோட்டத்திற்கு கேரளா எதிர்ப்பு:பிரதமரை சந்திக்கிறார் அச்சுதானந்தன்
திருவனந்தபுரம்:
பாலக்காடு ரயில் கோட்டத்தைப் பிரித்து சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம் அமைப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முறையிடப் போவதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
தமிழக நலன் குறித்து சற்றும் கவலைப்படாமல் தனது நலன் மட்டுமே முக்கியம் என்று செயல்பட்டு வருகிறது கேரள அரசு. முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் தூக்கிப் போட்டு விட்டது கேரள அரசு.
தற்போது புதிதாக உருவாகியுள்ள சேலம் ரயில் கோட்டத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழகத்திற்குள் அடங்கிய பகுதிகளை இணைத்து, பாலக்காடு ரயில் கோட்டத்திலிருந்து இந்தப் பகுதிகளைப் பிரித்து தனியாக சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ரயில் கோட்டத்தை உருவாக்க கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதுதொடர்பாக பலவித முயற்சிகளில் அது ஈடுபட்டது. இருப்பினும் சேலம் கோட்டம் உருவாவது உறுதி என்று ரயில்வே துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. புதிய ரயில்வே கோட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் கோட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு கோரி பிரதமரை சந்தித்து கோரிக்கை விடுக்கப் போவதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களிடம் ஆலோசனை பெற்றது கேரள அரசு. பின்னர் செய்தியாளர்களிடம் அச்சுதானந்தன் பேசுகையில், பாலக்காடு ரயில் கோட்டதைப் பிரிக்கக் கூடாது என்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம்.
இதுதொடர்பாக மாநிலத்தைச் சேர்ந்த எம்.பிக்களின் கருத்துக்கள் பெறப்பட்டன.
கேரள மாநிலம் சம்பந்தப்பட்ட ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்தவும், பாலக்காடு கோட்டத்தைப் பிரிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் நான் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் எம்.பிக்கள் குழு டெல்லி சென்று பிரதமரை சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அச்சுதானந்தன்.












Click it and Unblock the Notifications