சென்னையில் பிரதீபா பாட்டீல்-மகளிர் அணிபேரணியில் பங்கேற்பு
சென்னை:
திமுக ஏற்பாடு செய்துள்ள பிரமாண்ட மகளிர் பேரணியில் பங்கேற்க சென்னை வந்தார் பிரதீபா பாட்டீல்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள் சார்பில் பிரதீபா பாட்டீல் போட்டியிடுகிறார். தனது பிரசாரத்தை சென்னையிலிருந்து அவர் தொடங்குகிறார். திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிர் பேரணியை அவர் பார்வையிடுகிறார்.
இதற்காக இன்று பிரதீபா பாட்டீல் பகல் 1 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். அவருடன் பிரதமர் அலுவலக அரசாங்க அமைச்சர் பிருதிவிராஜ் சௌகான், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் ஆகியோரும் வந்தனர்.
விமான நிலையத்தில் பிரதீபாவுக்கு மிக உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், எம்பிக்கள் ஆருண், சித்தன், கார்வேந்தன் ஆகியோரும், எம்எல்ஏக்கள் யசோதா, ராணி வெங்கடேசன் மற்றும் கூட்டணி தலைவர்களும் வரவேற்றனர்.
பின்னர் பிரதீபா பாட்டீல் விமான நிலையத்திலிருந்து தாஜ் கோரமண்டல் ஹோட்டலுக்கு சென்றார்.
பிரதீபா பாட்டீலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள் சார்பிலான வேட்பாளராக தேர்வு செய்வதில் முதல்வர் கருணாநிதி முக்கியப் பங்கு வகித்தார். இதனால் தனது பிரசாரத்தை சென்னையிலிருந்து தொடங்க பிரதீபா பாட்டீல் முடிவெடுத்தார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஒரு பெண்ணை வேட்பாளராக தேர்ந்தெடுத்ததற்காக சோனியா காந்திக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் பிரதீபா பாட்டீலுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த பேரணிக்கு திமுக ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் பேரணியில் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள பெண்களும் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திமுகவைச் சேர்ந்த பெண்களை சென்னைக்கு அழைத்து வர அந்தக் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
மாலை சென்னை மன்ரோ சிலையிலிருந்து பேரணி தொடங்கி, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் பேரணி முடிவடைகிறது.
அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் இருந்தபடி, முதல்வர் கருணாநிதி, பிரதீபா பாட்டீல், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பேரணியைப் பார்வையிடுகிறார்கள்.
பேரணியைத் தொடர்ந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பேரணி செல்லும் பாதைகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி,தமிழக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டும் பொருட்டு, அவர்களை சந்திப்பதற்காக தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இரவு 8 மணிக்கு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் பிரதீபா பாட்டீல்.
இந்த மகளிர் பேரணி முன்னிட்டு சென்னை விழா கோலம் பூண்டுள்ளது. நகரின் முக்கிய சாலைகள் மற்றும் பாலங்களில் திமுக, காங்கிரஸ் பேனர்கள், அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications