நகராட்சி தலைவர் குண்டு வைத்து கொலை:2 திமுகவினர் மீது வழக்கு
சிவகங்கை:
சிவகங்கையில் திமுகவைச் சேர்ந்த நகராட்சித் தலைவர் முருகன் குண்டு வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட திமுக துணை செயலாளர் உள்ளிட்ட 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உள்கட்சி மோதலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சிவகங்கை நகராட்சித் தலைவராக இருந்தவர் முருகன். நேற்று இவரது காரில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை சிவகங்கையில் இப்படி ஒரு பயங்கர சம்பவம் நடந்ததில்லை என்பதால் சிவகங்கை மக்கள் அதிர்ந்தும் பயத்திலும் உள்ளனர். மிகவும் சக்தி வாய்ந்த குண்டு மூலம் முருகன் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதால் இந்தக் குண்டு எப்படி வந்தது, யார் இதன் பின்னணியில் உள்ளனர் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கட்சிக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே முருகன் கொல்லப்பட்டிருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சிவகங்கை நகராட்சித் தலைவர் பதவிக்கு முருகன் சீட் கேட்டிருந்தார். ஆனால் திமுக தலைமை அவருக்கு சீட் தரவில்லை. இதையடுத்து போட்டி வேட்பாளராக அவர் போட்டியிட்டார்.
வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்களில் 15 பேர் முருகனை ஆதரித்தனர். அதிகாரப்பூர்வ வேட்பாளரான மாவட்ட துணை செயலாளர் மணிமுத்துவுக்கு 11 பேரின் ஆதரவே கிடைத்தது. இதனால் நகராட்சித் தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
இருமுறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் மூன்றாவது முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில், முருகனின் ஆதரவாளரான சுயேச்சை கவுன்சிலர் முத்துப்பாண்டி திடீரென கடத்தப்பட்டார். இதையடுத்து மணிமுத்து மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து முத்துப்பாண்டி திமுகவில் இணைந்தார். பின்னர் நடந்த தேர்தலில் முருகன் வெற்றி பெற்று நகராட்சித் தலைவர் ஆனார்.
இந்த சம்பவத்தால் மணிமுத்துவுக்கும், முருகனின் நண்பரான நாகராஜுக்கும் இடையே கடும் பூசல் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் மணிமுத்துவின் ஆதரவாளரான குமரன் என்கிற மந்தக்காளைக்கும், முருகனுக்கும் கேபிள் டிவி இணைப்புகளை யார் அதிகம் வைத்திருப்பது என்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
இதில் மந்தக்காளை சமீபத்தில் அரிவாளால் வெட்டப்பட்டார். நாகராஜும் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக முருகன், மணிமுத்து ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் முருகன் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே சந்தேகம் அப்படியே மணிமுத்து மீது திரும்பியுள்ளது. அவர் மீதும் மந்தக்காளை மீதும் போலீஸார் ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
இதற்கிடையே, முருகனின் உறவினர்கள் சிலர், இப்பகுதி அமைச்சருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கக் கூடும் என்பதால் அவரையும் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் சிவகங்கையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவரான முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் மதுரையில் கோஷ்டி மோதலில் வெட்டிக் கொல்லப்பட்டார். இப்போது அதே சிவகங்கை மாவட்டத்தில் மீண்டும் ஒரு கோஷ்டி மோதலில் நகராட்சித் தலைவர் கொல்லப்பட்டுள்ளார். இதனால் சிவகங்கை மாவட்டம் தொடர்ந்து பீதியில் உள்ளது.












Click it and Unblock the Notifications