சென்னை-மதுரை இடையே புல்லட் ரயில்!!
மதுரை:மதுரைக்கு சென்னையிலிருந்து மணிக்கு 350 கிமீ வேகத்தில் அதிவேக ரயில் விடப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் தாமஸ் வர்கீஸ் கூறுகையில்,
ரயில்வேதுறை சென்னையிலிருந்து கொச்சிக்கு இந்த புல்லட் ட்ரெயினை அறிமுகப்படுத்த திட்டமிட்டது. ஆனால் தமிழக அரசு முதலில் சென்னை-மதுரை இடையே செயல்படுத்த விரும்பியது.
இந்த திட்டத்தை சென்னை-மதுரை இடையே செயல்படுத்த ரூ.35,000 கோடி செலவாகும். அவ்வளவு தொகை ரயில்வே துறையிடம் இல்லாததால் மாநில அரசின் உதவியுடன் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும் செங்கல்பட்டு-திருநெல்வேலி வழித் தடத்தில் மின் பாதையுடன் ரூ.1,600 கோடியில் இரு வழிப்பாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் ரயில்வே போர்டில் இருந்து வந்தவுடன் அதற்கான பணி துவங்கும்.
மதுரை மண்டலத்துக்கு மட்டும் ரூ.836 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து மீட்டர்கேஜ் பாதைகள் பிராட்கேஜாக மாற்றப்பட்டு ஒரு வழிப் பாதைகளும், இரு வழிகளாக மாற்றப்படும்.
தென்னக ரயில்வேயில் அனைத்து பாதைகளும் அடுத்த 3 ஆண்டுகளில் பிராட் கேஜாக மாற்றப்படும். இதில் மதுரை மண்டலத்தில் மதுரை-போடி ரயில் பாதையை தவிர மற்ற அனைத்து மீட்டர் கேஜ் தடங்களும் அகலப் பாதையாக மாற்றி விடுவோம் என்றார்.