தாறுமாறாக ஓடி, பஸ் மீது மோதிய வேன் - 4 பேர் பலி
மதுராந்தரம்:காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாயினர்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தைசத் சேர்ந்தவர் சுப்பிரமணி (45). இவர் வளைகுடாவில் வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை விமானத்தில் சென்னை வந்தார். அவரை உறவினர்கள் வரவேற்று ஊருக்கு அழைத்துச் சென்றனர்.
டாடா சுமோ வேனில் அனைவரும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சங்கராபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
மதுராந்தகம் அருகே படு வேகத்தில் வேன் சென்று கொண்டிருந்தது. இந் நிலையில் வேனின் டிரைவர் சில நொடிகள் கண் அயர்ந்துள்ளார்.
இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலைத் தடுப்பு மீது மோதி எதிர் பக்க சாலையில் பாய்ந்தது.
அந்த பக்கமாக வந்து கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்தின் மீது மோதி, மீண்டும் சாலைத் தடுப்பை நோக்கி தூக்கி வீசப்பட்டது அந்த வேன்.
இந்த பயங்கர விபத்தில் சுப்பிரமணி, அவரது உறவினர் செந்தில் (25), வேன் டிரைவர் பாட்ஷா (25) ஆகியோர் பலியாகிவிட்டனர்.
பலியான நான்காவது நபர் யார் என்ற அடையாளம் தெரியவில்லை. விபத்தில் வேனில் பயணித்த ஒரு பெண் காயமடைந்தார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து வேனை அங்கிருந்த அப்புறப்படுத்தினர். சேதமடைந்த பேருந்தும் ஓரம் கட்டப்பட்டது. உடல்கள் அங்கிருந்து மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். அனைவரும் வேறு பேருந்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications