மும்பை குண்டு வெடிப்பு: யாகூப் மேமனுக்குமரண தண்டனை-சஞ்சய் தத் மீது 31ல் தீர்ப்பு
டெல்லி:1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமனுக்கு மரண தண்டனை வழங்கி தடா சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
அவரது சகோதரர்களான ஈசா, யுசுப் மற்றும் ருபீனா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சார்ட்டர்ட் அக்கெளண்டென்டான யாகூப் தான் குண்டு வெடிப்புக்குத் தேவையான நிதியுதவிகளையும், ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் தந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன், நீதிபதியை நோக்கி ஆவேசத்துடன் முன்னேறிய யாகூப், கடவுளே இந்த மனிதனை மன்னித்துவிடு, இவர் தான் செய்யும் தவறை அறியாமல் தவறு செய்கிறார் என்று ஆவேசமாக கத்தினார். அவரை ஈசாவும், யூசுப்பும் அமைதிப்படுத்தினர். தீர்ப்பைக் கேட்ட ருபீனா மயங்கி விழுந்தார்.
இந்த குண்டு வெடிப்பில் முக்கிய தொடர்புடைய டைகர் மேமன் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
யாகூப்பும் குண்டு வெடிப்புக்கு ஒரு நாள் முன்னதாக குடும்பத்துடன் துபாய் சென்றுவிட்டார். ஆனால், அவர்களை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி சிபிஐ நெருக்கடி தந்ததால் கடந்த 1994ம் ஆண்டு நாடு திரும்பி சரணடைந்தனர்.
ஆனால், தங்கள் மீது தவறு இல்லை என்பதால் தான் நாடு திரும்பியதாக மேமன் குடும்பத்தினர் கூறி வந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய இந்தி நடிகர் சஞ்சய் தத் மீது வரும் 31ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் இன்று அறிவித்தது.
டிராவல் ஏஜென்சி நடத்தி வந்த யாகூப் குண்டு வெடிப்பு நடத்திய தீவிரவாதிகள் இந்தியா வந்து செல்ல ஏற்பாடுகள் செய்து தந்தார். மேலும் 85 குண்டுகளையும் திரட்டித் தந்தார்.
தங்களது வீட்டில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தந்ததாகவும், காரை அவர்களுக்குத் தந்ததாகவும் ஈசா மீதும் ருபீனா மீதும் குற்றம் சாட்டப்பட்டது.












Click it and Unblock the Notifications