நாடு திரும்ப நவாஸ் ஷெரீப் தீவிரம்!
இஸ்லாமாபாத்:மீண்டும் பாகிஸ்தான் திரும்ப அனுமதி கோரி அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் முஷாரப்பால் நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது சகோதரர் ஷாபாஸ் ஷெரீப்பும் வழக்கு தொடரவுள்ளனர்.
கடந்த 1999ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரத்தம் சிந்தாத ராணுவப் புரட்சியின் மூலம் நவாஸ் ஆட்சியைக் கவிழ்த்தார் ராணுவ தளபதியாக இருந்த பெர்வேஸ் முஷாரப். அதன் பின்னர் 2000மாவது ஆண்டு டிசம்பர் மாதம் நவாஸை சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தினார்.
தற்போது நவாஸ் ஷெரீப் லண்டனில் வசித்து வருகிறார். தற்போது பாகிஸ்தானில் முஷாரப்புக்கு எதிரான அலை பலமாக வீசி வருகிறது. அவரால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரி மீண்டும் பதவிக்குத் திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், மீண்டும் நாடு திரும்ப உச்சநீதிமன்றத்தை அணுக ஷெரீப் சகோதரர்கள் முடிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இதுதொடர்பான மனுவை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பக்ருதீன் இப்ராகிம், ஷெரீப் சகோதரரர்கள் சார்பில் தாக்கல் செய்யவுள்ளார்.
இதுகுறித்து இப்ராகிம் கூறுகையில், சமீபத்தில் லண்டன் சென்றபோது நவாஸ் ஷெரீப்பையும், ஷாபாஸ் ஷெரீப்பையும் சந்தித்துப் பேசினேன். தாங்கள் பாகிஸ்தானுக்கு மீண்டும் திரும்புவதற்கு வசதியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு அப்போது அவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications