சென்னைக்கு மீண்டும் வீராணம் தண்ணீர்!
சென்னை:சென்னை நகருக்கு மீண்டும் வீராணம் ஏரியிலிருந்து குடிநீர் விநியோகம் தொடங்கியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தண்ணீர் பஞ்சத்தால் வாடிய சென்னை நகருக்கு கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து நேரடியாக தண்ணீர் கொண்டு வரும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. புதிய வீராணம் திட்டம் என்ற பெயரிலான இந்தத் திட்டத்தால் சென்னை நகர மக்கள் தண்ணீர் பஞ்சக் கொடுமையிலிருந்து மீண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
கடந்த சில மாதங்களாக வீராணம் ஏரியிலிருந்து குடிநீர் விநியோகிப்பது தடைபட்டிருந்தது. ஏரியில் போதிய நீர் இல்லாததால் இந்தத் தடை. இந்த நிலையில் தற்போது ஏரியில் போதிய தண்ணீர் இருப்பதால் மீண்டும் குடிநீர் விநியோகம் தொடங்கியுள்ளதாக மெட்ரோவாட்டர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சென்னை நகரில் லாரிகள் மற்றும் குழாய்கள் மூலம் தினசரி 645 மில்லியன் லிட்டர் நீர் சப்ளை செய்யப்படுகிறது.
தற்போது, வீராணம் ஏரியிலிருந்து 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு போரூர் நீரேற்று மையம் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் நேற்று முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரியில் தற்போது 43.5 அடி நீர் உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 1800 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications