வேலூர் சிறுவர் சிறையில் இருந்து 22 பேர்தப்பியோட்டம் - 7 பேர் பிடிபட்டனர்
வேலூர்:வேலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 22 பேர் நேற்றிரவு தப்பியோடிவிட்டனர். தப்பிய சிறுவர்களில் 7 பேரை போலீசார் பிடித்துவிட்டனர். மற்றவர்களைப் பிடிக்க சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொலை, கொள்ளை, திருட்டு உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு கைதான இந்த 56 சிறுவர்கள் வேலூர் சீர்திருத்தப் பள்ளியில் (சிறுவர் சிறை) அடைக்கப்பட்டிருந்தனர்.
நேற்றிரவு இங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த எத்திராஜ்(50) என்பவரிடம் சிறுவர்கள், உள்ளே குடிக்கிற தண்ணீரில் பல்லி கிடக்கிறது, வேறு தண்ணீரை மாற்றுங்கள் எனக் கூறியுள்ளனர்.
உள்ளே சென்ற அவரை 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் போர்வையால் பொத்தி கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு 22 குற்றவாளிச் சிறுவர்கள் தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்த போலீசார் வேலூரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ஒரு சிறுவன் இரவிலேயே பிடிபட்டுவிட்டான்.
மற்றவர்களைப் பிடிக்க பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனைகளும் நடந்து வருகின்றன.
இந் நிலையில் இன்று மேலும் 6 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர்.
சம்பவம் குறித்து வேலூர் எஸ்பி அறிவுச்செல்வன், சீர்திருத்தப் பள்ளியின் கண்காணிப்பாளர் வெங்கட்ராமனிடம் நேரில் விசாரணை நடத்தினார்.
2 மாதங்களுக்கு முன் இதே பள்ளியில் இருந்து 19 பேர் தப்பியோடியது குறிப்பிடத்தக்கது. இதில் 18 பேர் பிடிபட்டுவிட்டனர். ஒருவன் இன்னும் பிடிபடாமல் இருந்து வருகிறான்.
இந்த சீர்திருத்தப் பள்ளியின் பாதுகாப்புக் குறைபாடுகளே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications