எலியால் நின்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்!
நாகர்கோவில்:ரயில் பெட்டிக்குள் எலி புகுந்ததால் கடுப்பான பயணி, அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்.
கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை வழக்கம் போல நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பியது.
ரயில் கிளம்பிய சிறிது நேரத்திலேயே ரயில் நின்றது. இதனால் பயணிகள் குழம்பினர். பிறகுதான் தெரிந்தது யாரோ ஒரு பயணி அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியது.
சம்பந்தப்பட்ட பெட்டிக்கு ரயில் டிரைவர் மற்றும் அதிகாரிகள் சென்றனர். யார் சங்கிலியைப் பிடித்து இழுத்து நிறுத்தியது, ஏன் என்று அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது ஒரு பயணி குறுக்கிட்டு நான்தான் நிறுத்தினேன். எனது பெர்த்துக்குக் கீழே ஒரு எலி சிக்கிக் கொண்டுள்ளது. அதை எடுத்து வெளியே விட்டால்தான் ரயில் புறப்பட அனுமதிப்பேன் என்றார் கோபமாக.
இதையடுத்து ஊழியர்கள் அந்தப் பகுதியில் பார்த்தபோது, அங்கு ஒரு எலி பசை போன்ற ஒன்றில் சிக்கித் தவித்தது தெரிய வந்தது. எலியைப் பிடிப்பதற்காக ரயில்வே ஊழியர்கள் ஒட்டியிருந்த பசைதான் அது. அதில்தான் அந்த எலி சிக்கியுள்ளது.
இதையடுத்து எலியைப் பிடித்து வெளியே விட்டனர். அதன் பின்னர் அந்தப் பயணி திருப்தி அடைந்தார். இதைத் தொடர்ந்து ரயில் மீண்டும் சென்னைக்குக் கிளம்பியது.
எலி பிடிக்க பசையை ஒட்டிய புண்ணியவான்கள், அதில் ஏதேனும் எலி சிக்கியுள்ளதா என்பதையும் முறையாக பரிசோதித்திருந்தால் இந்த தாமதம் ஏற்பட்டிருக்காது.












Click it and Unblock the Notifications