கணவர் பிணத்துடன் 3 நாட்களாக வசித்த மனநலம்பாதித்த பெண்-துணைக்கு 7 பூனைகள், 3 நாய்கள்!
சென்னை:கணவரின் இறந்த உடலுடன் 3 நாட்களாக தனியாக வசித்துள்ளார் மன நலம் பாதிக்கப்பட்ட வயதான பெண். அவர்கள் வளர்த்து வரும் 7 பூனைகளும், 3 நாய்களும் வெளியில் எங்கும் போகாமல் அந்த முதியவரின் உடலுக்கு அருகேயே அமர்ந்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
சென்னை அடையார், சர்தார் வல்லபாய் படேல் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தவர் சத்யநாராயணன் (60). மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் இவர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சசிகலா (45). இவர்களுக்கு குழந்தை கிடையாது. சசிகலாவுக்கு லேசான மன நல பாதிப்பு உண்டு.
குழந்தைகள் இல்லாத இந்தத் தம்பதியினர் 7 பூனைகளையும், 3 நாய்களையும் வளர்த்து வருகின்றனர். குழந்தைகள் போல இவற்றின் மீது பாசம் வைத்துள்ளனர்.
இந் நிலையில், சத்யநாராயணன் வீடு கடந்த 3 நாட்களாக உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், கோட்டூர்புரம் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் வந்து கதவைத் தட்டினர். சசிகலா கதவைத் திறந்தார். அப்போது துர்நாற்றம் அதிகளவில் வந்தது. சசிகலாவிடம் பேசியபோது அவர் சரியாக பேசவில்லை. இதையடுத்து போலீஸார் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
ஒவ்வொரு அறையாக சென்ற அவர்கள் சமையல் அறைக்குப் போனபோது, அங்கு சத்தியநாராயணன் பிணமாகக் கிடந்தார். அவரது உடல் அழுகிப் போய்க் காணப்பட்டது.
அவரது உடலுக்கு அருகே அவர் வளர்த்து வந்த நாய்களும், பூனைகளும் அமைதியாக உட்கார்ந்திருந்தன.
பின்னர் சசிகலாவிடம் என்ன நடந்தது என்று போலீஸார் கேட்டபோது, எனது கணவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்றார். இதையடுத்து போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் சமையல் அறையில் வழுக்கி விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கணவர் இறந்தது கூடத் தெரியாமல், உடல் துர்நாற்றத்தைக் கூட உணர முடியாமல் அதைப் பொறுத்துக் கொண்டு சசிகலா வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளார்.
சத்தியநாராயணனின் உறவினர்கள் பெங்களூரில் உள்ளனராம். அவர்களுக்குப் போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications