ஓனிக்ஸ் போச்சு, சென்னையே நாறிப் போச்சு!
சென்னை:சென்னை நகரில் இதுவரை குப்பைகளை அகற்றி வந்த ஓனிக்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்ததால், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனம், நகர் முழுவதும் மலை போல குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற முடியாமல் தடுமாறி வருகிறது. இதனால் நகரமே நாறிப் போய்க் கிடக்கிறது.
சென்னை மாநகராட்சியின் 6, 8 மற்றும் 10வது மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரைச் சேர்ந்த ஒனிக்ஸ் நிறுவனம் மேற்கொண்டிருந்தது. இந்த நிறுவனத்துக்கான ஒப்பந்தம் கடந்த 25ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.
இதையடுத்து நீல் மெட்டல் என்கிற தென் ஆப்பிரிக்க நிறுவனத்திடம் இந்தப் பணி கொடுக்கப்பட்டுள்ளது. ஓனிக்ஸ் நிறுவனம் தனது ஒப்பந்தம் முடிந்ததைத் தொடர்ந்து தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைத்திருந்த குப்பைத் தொட்டிகளை எடுத்துக் கொண்டு போய் விட்டது.
இதனால் கடந்த நான்கு நாட்களாக குப்பைகள் நகர் முழுவதும் பெருகிப் போய் விட்டன. தெரு முனைகள், சாலை ஓரங்கள் உள்பட கிடைக்கும் இடத்தில் எல்லாம் மக்கள் குப்பையை கொட்டி வைத்துள்ளதால் நகரமே நாறிப் போயுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீல் மெட்டல் நிறுவனம் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யாததால், மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஓனிக்ஸ் நிறுவனம் மக்கள் வசதிக்காக பெரிய பெரிய குப்பைத் தொட்டிகளை வைத்திருந்தது.
ஆனால் நீல் மெட்டல் நிறுவனம் வைத்துள்ள குப்பைத் தொட்டிகள் மிகவும் சிறியவை. இரண்டு வீட்டுக் குப்பைகளுக்கே அவை போதாது என்பதால் குப்பைத் தொட்டியில் மட்டும் போடாமல் அதைச் சுற்றிலும் மக்கள் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர்.
மேலும் பெருகிக் கிடைக்கும் குப்பைகளை அள்ள முடியாமல் நீல் மெட்டல் திணறி வருகிறது. அந்த நிறுவனத்திடம் குப்பையை அள்ள போதிய வாகனங்களும் இல்லை.
செனனை நகரின் முக்கியப் பகுதிகளான அடையாறு, தி.நகர், கோடம்பாக்கம், அண்ணா சாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை என நகரில் எங்கு பார்த்தாலும் மலை போல குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
கடந்த நான்கு நாட்களாக இந்தக் குப்பைகள் அகற்றப்படாததால் பெரும் துர்நாற்றம் வீசுகிறது. சொறி நாய்கள் இங்கு விளையாடி வருகின்றன.
3 மண்டலங்களிலும் ஒரு நாளைக்கு 1,400 டன் குப்பை சேருவது வழக்கம். தினசரி சுமார், 2,000 டன் குப்பைகள் 4 மண்டலங்களிலும் சேருவதால் புதிய நிறுவனத்தால் குப்பைகளை அள்ள முடியவில்லை. அதனால் அந்த பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் தற்போது குப்பைகள் அள்ளப்பட்டு வருகிறது.
இன்னும் 10 நாட்களில் நிலைமை சீராகும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்னொரு பக்கம் கன மழை
சென்னையில் இன்று காலை முதல் மழை பெய்து வருவதால் குப்பை அள்ளும் பணி முழுவதும் பாதித்தது.
குப்பைகளை அகற்றுவதில் மாநகராட்சி முனைப்புடன் செயல்படுகிறது. இருந்தாலும் போதிய ஊழியர்கள் இல்லாததால் மாநகராட்சியால் சமாளிக்க முடியவில்லை.
நிலைமை மோசமாகி வருவதை அறிந்த சென்னை மாநகராட்சி, யார் வேண்டுமானாலும் குப்பைகளை அள்ளலாம், ஒரு லாரிக்கு ரூ. 500 வாடைகயாக தரப்படும் என திடீரென்று அறிவித்துள்ளது.
மழை பெய்ததால் தேங்கி கிடக்கும் குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஓனிக்ஸ் நிறுவனத்தில் பணி செய்த ஊழியர்களை மீண்டும் பயன்படுத்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. குறைந்த கூலி தருவதாலும், வேலைக்கு உத்தரவாதம் இல்லாததால் அவர்கள் மீண்டும் பணியில் சேர தயங்குகிறார்களாம்.












Click it and Unblock the Notifications