மணல் அள்ளுவதைத் தடுத்தால் அரசுவேடிக்கை பார்க்காது: துரைமுருகன் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:அரசு அனுமதியுடன் மணல் அள்ளுவதைத் தடுத்தால் அதை அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாமக, அதிமுகவுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Duraimurugan

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழகத்தில் கட்டுமானத் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பல பெரிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மணல் மிகவும் அவசியமான ஒரு கட்டுமானப் பொருளாகும்.

அந்த மணலை மக்களுக்கு முறையாக விநியோகம் செய்ய அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதே நேரத்தில் மணலை எடுப்பது என்ற பெயரால் சிலர் தவறு செய்வதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது.

சிலர் மணல் கொள்ளை நடைபெறுவதாகக் கூறிக் கொண்டு அதைத் தடுக்க மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பதும், முறையாக அரசின் சார்பில் அனுமதி பெற்று மணல் எடுப்பதையே மணல் கொள்ளை நடப்பதாக விமர்சிப்பதும் உண்மையிலேயே மக்களுக்கு உதவி புரிகிற செயலாக தெரியவில்லை. மாறாக தேவையில்லாமல் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் திட்டமிட்ட காரியமகாவே தெரிகிறது.

கடந்த ஜெயலலிதா ஆட்சியில் 2005-06ல் மணல் விற்பனையின் மூலமாக அரசுக்குக் கிடைத்த வருமானம் ரூ. 74.64 கோடியாகும். 2006-07 திமுக ஆட்சியில், மணல் விற்பனையின் மூலமாக கிடைத்த வருவாய் ரூ. 130.92 கோடியாகும்.

இதிலே எங்கே மணல் கொள்ளை நடந்தது, எப்போது, யாரால் என்பதை நீதிமன்றத்திற்குச் செல்வதாக அறை கூவல் விடுப்பவர்கள், அங்கே நிரூபிப்பார்களேயானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையிலே அவர்கள் இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்.

3 அடிக்குக் கீழே மணல் எடுக்கக் கூடாது என்று விதி உள்ளது. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் 30 அடிக்குக் கீழே மணல் எடுக்கப்படுவதாக ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் உண்மையல்ல. எங்குமே 30 அடிக்குக் கீழே மணல் எடுக்கப்படவில்லை.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திருவள்ளூர் மாவட்டத்திற்கு நேரில் சென்று இதுகுறித்து விசாரித்தபோது கூட யாரும் 30 அடிக்குக் கீழே மணல் எடுக்கப்படுவதாக புகார் கூறவில்லை.

இயந்திரம் மூலம் 2 யூனிட் மணலுக்குப் பதிலாக 4 முதல் 8 யூனிட் மணல் வரை அள்ளிச் செல்வதாக பாமகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதிலும் உண்மையில்லை. தற்போது நமது மாநிலத்தில் உள்ள லாரிகளில் 8 யூனிட் மணலை ஏற்றிச் செல்லவே முடியாது. அதிகபட்சமாக, அதுவும் டாரஸ் லாரியாக இருந்தால் 4 யூனிட் மணலை ஏற்றிச் செல்லலாம். எனவே 8 யூனிட் மணலை சாதாரண லாரியில் ஏற்றிச் செல்வதாக தவறான செய்தியை மக்களிடம் பரப்பி அதற்காகப் போராட்டம் நடத்தப் போவதாக சொல்கிறார்கள்.

10 மாதத்தில் அரசுக்கு வர வேண்டிய ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு புகார் கூறியுள்ளனர். இதிலும் உண்மை இல்லை. அரசுக்கு இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் வருவாயே வந்ததில்லை. அதிகபட்சமாக தற்போது 133 கோடி ரூபாய் வரைதான் வருவாய் கிடைத்துள்ளது. எனவே இது மக்களை திசை திருப்புகிற பொய்யான புகாராகும்.

இப்படியெல்லாம் கூறி மணல் முறையாக எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்தி, அதனால் மணல் பற்றாக்குறை ஏற்பட்டு, மணல் வியாபாரிகள் அதிக விலையில் மணலை விற்பதற்கான சூழ்நிலையும் இதனால் ஏற்படக் கூடும்.

ஆற்றிலிருந்து மணல் எடுப்பதைத் தடுத்து விட்டால், கட்டடத் தொழிலாளர்களின் பணிகளும் பாதிக்கப்பட்டு விடும். மேலும் சாதாரண நடுத்தர மக்கள், தாங்கள் கட்டுகின்ற வீடுகளுக்கு மணல் கிடைக்காமல், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகவும், புதிதாக வருகின்ற தொழிற்சாலைகள் தாங்கள் கட்டுவதற்குத் தேவையான மணல் கிடைக்காமல் அவஸ்தைப்படுகின்ற நிலைமைகளும் ஏற்பட்டு அரசின் மீது வெறுப்பு ஏற்படுகிற நிலையும் வரக் கூடும்.

மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி, மணல் விற்பனையை தடுத்து நிறுத்தி விட்டால் பாதிக்கப்படுவது அந்தந்த ஊர் மக்களும்தான். மேலும் போராட்டம் என்கிற பெயரில், மணல் எடுப்பதற்கே மூடு விழா நடத்தி விட்டால், பின்னர் மணல் மேடுகள் ஆங்காங்கு ஏற்பட்டு வெள்ளம் வருகின்ற நேரத்தில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் நுழையக் கூடிய பாதிப்புகளும் ஏற்படும்.

எனவே அரசின் அனுமதி பெற்று முறையாக எடுக்கப்படுகிற மணலை தடுத்து நிறுத்த முயற்சிப்பதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அவ்வாறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் துரைமுருகன்.

சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் விடையூர் கிராம மக்கள், டாக்டர் ராமதாஸை சந்தித்து தங்கள் ஊரில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் விதிகளுக்குப் புறம்பாக மணல் அள்ளுவதாக புகார் கூறினர். இதையடுத்து டாக்டர் ராமதாஸ் அங்கு சென்று போராட்டம் நடத்தினார்.

2 நாட்களுக்கு முன்பு பாமக எம்.எல்.ஏக்கள் தமிழரசு, காவேரி உள்ளிட்டோர் மணல் கொள்ளை நடப்பதைத் தடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என எச்சரித்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், விடையூர் கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதைக் கண்டித்து இன்று அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். இப்போராட்டத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை, திருத்தணி நகர அதிமுக செயலாளர் கோ.அரி ஆகியோர் தலைமை வகிப்பார்கள் எனவும் அவர் அறிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில்தான் துரைமுருகனின் எச்சரிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+