திமுகவுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள்-கருணாநிதி
சென்னை:ஆட்சிக்கும் கட்சிக்கும் சிலர் மிரட்டல்கள் விடுக்கின்றனர், என்னைப் பார்த்து சில பேர் அறைகூவல் விடுக்கிறார்கள் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
திருமண நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர் பாமகவையும் ராமதாஸையுமே அவர் மறைமுகமாத் தாக்கியதாகத் தெரிகிறது.
கருணாநிதியின் மைத்துனர் தட்சிணாமூர்த்தியின் பேத்தி முல்லைக்கொடி-தணிகை வடிவேலு திருமணம் இன்று சென்னையில் நடந்தது. இத் திருமணத்தை நடத்தி வைத்து கருணாநிதி பேசுகையில்,
எல்லாத் திருமணங்களிலும் வாழ்த்துகிறோம், வாழ்த்துவதிலே மகிழ்ச்சியடைகிறோம் என்றுதான் சொல்வோம். ஆனால், இந்தத் திருமணத்தை நடத்தி வைப்பதில் பெருமையடைகிறேன் என்று சொல்வதற்குக் காரணம், இந்தத் திருமணமும் என் வீட்டில் நடைபெறுகின்ற பெரும்பாலான காதல் திருமணங்களைப் போன்ற ஒரு திருமணம் என்பதால் தான். காதலித்த மணமக்களை எண்ணி பெருமையடைகிறேன்.
காதலை விட்டுக் கொடுக்காமல் இறுதி வரையிலே உறுதியாக இருந்து, இன்று மணவிழாவை நம் முன்னிலையிலே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு பொது வாழ்விலே ஐம்பதாவது சட்டமன்ற பொறுப்பு பொன்விழா நடைபெற்றிருக்கிறது. பொது வாழ்க்கையிலே அடியெடுத்து வைத்து எழுபதாண்டு காலம் ஆகிறது. இந்த பூமியிலே அடியெடுத்து வைத்து 83 ஆண்டுகளாகிறது.
முதல் பதிமூன்று ஆண்டுகள் வேண்டுமானால் தமிழ் மக்களைப் பற்றிக் கவலைப்படாத இடத்திலே நான் இருந்திருக்கக் கூடும். ஆனால் அதற்குப் பிறகு நான் கவலைப்பட்டது, பணியாற்றியதெல்லாம் தமிழ் மக்களுக்காகத் தான்.
இன்னும் மிச்சமிருக்கும் காலமும், இந்த மக்களுக்காகத் தான் பாடுபடுவேன், பணியாற்றுவேன்.
அதற்குள்ளாக இந்த ஆட்சிக்கு, இந்தக் கட்சிக்கு எவ்வளவு மிரட்டல்கள் வருகின்றன. என்னைப் பார்த்து சில பேர் அறைகூவல் விடுக்கிறார்கள்.
வா.. வந்து பார் என்றெல்லாம் என்னிடத்திலே சவால் விடுகிறார்கள். இப்படி சவால் விடுகிறார்களே, நாம் என்ன தவறு செய்தோம். இந்த நாட்டில் நல்லாட்சி நடத்த வேண்டுமென்று விரும்புவதைத் தவிர வேறு என்ன தவறு செய்தோம் என்று எண்ணுகிற நேரத்தில் அவர்களுடைய சவாலை தனி ஒருவனாக நாம் எப்படி ஏற்கப் போகிறோம் என்று எனக்குத் தயக்கமே வராமல்,
இது போன்ற விழாக்களில் உங்களைப் போன்ற (திமுக தொண்டர்களைக் காட்டி) கட்டிளம் காளைகள், வீர உள்ளம் படைத்தவர்களை, இயக்கக் காவலர்களாக விளங்கியவர்களை, விளங்கிக் கொண்டிருப்பவர்களை, எதிர்காலத்தில் விளங்கப் போகிறவர்களை எண்ணிப் பார்த்துத் தான் நீ இருக்க பயமேன் என்கின்ற உறுதியோடு நான் இருக்கிறேன்.
காஞ்சித் தலைவன் படத்துக்காக நான் எழுதியிருந்தேன். நீ இருக்கும் போதா நான் அச்சப்படப் போகிறேன், உன் நெஞ்சில் நான் இருக்கும் போதா அச்சப்படப் போகிறேன் என்று. அதைத் இப்போது நினைவூட்டிக் கொள்கிறேன்.
எனக்கு முன் இங்கே பேசியவர்கள் போராட்டம் பற்றி பேசியதால் இதைக் குறிப்பிட நேர்ந்தது. யார் யாரோ இன்றைக்கு தோள் தட்டுகிறார்கள், புஜம் தட்டுகிறார்கள், யார் யாரோ மீசை முறுக்குகிறார்கள்.
நாம் ஆட்சியிலே இல்லாவிட்டாலும் கூட திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற இந்தச் சுய மரியாதை இயக்கம், நாட்டில் நடமாடக் கூடாது என்று எண்ணுகின்றவர்களை நான் நன்றாக அறிவேன்.
அவர்கள் எல்லாம் இந்த இயக்கத்தை வீழ்த்துவதற்கு என்னென்ன வார்த்தைகளை பயன்படுத்தினார்கள் ஆரம்ப காலத்தில் என்னென்ன படையெடுப்பெல்லாம் நடத்தினார்கள் என்பதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும்.
அவைகளையெல்லாம் தாக்குப் பிடித்துத் தான் இந்த தன்மான இயக்கம், தந்தை பெரியாரின் வழியில், அண்ணாவின் வழியில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications