தென்கொரிய பிணைக்கைதிகள் 3 பேர் விடுதலை
காபூல்: தாலிபன் தீவிரவாதிகள் பிடியில் இருந்த தென்கொரிய பிணையாளிகளில் 3 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் 23 தென்கொரியர்களை பிணைக் கைதிகளாக தாலிபன் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். அவர்களை விடுவிக்க வேண்டுமென்றால், ஆப்கானிஸ்தானில் உள்ள தென்கொரிய நாட்டு படைகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
ஆனால் தாலிபன்களின் கோரிக்கைக்கு தென்கொரிய அரசு செவி சாய்க்கவில்லை. தாலிபன்கள் விடுத்த கெடு முடிந்தும் எதுவும் நடக்காததால், பிணைக்கைதிகள் 2 பேரை அடுத்தடுத்து கொன்றனர். 2 பெண்கள் விடுவிக்கப்பட்டனர்.
2 பேரை கொன்றதால் அதிர்ச்சியடைந்த தென்கொரிய அரசு, மீதமுள்ள 19 பேரை உயிருடன் விடுவிக்க தூதுக்குழுவை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. தாலிபன் பிரதிநிதிகளுடன் தூதுக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து பிணைக் கைதிகளை விடுவிக்க தாலிபன் அமைப்பு ஒத்துக் ெகாண்டது. இதற்கு சில நிபந்தனைகளை தாலிபன் விதித்துள்ளது.
தென்காரியா தனது படைகளை ஆப்கனிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும், ஆப்கானிஸ்தானில் தென்கொரியர்கள் எவரும் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளனர். இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் இன்னும் ஓரிரு தினங்களில் பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிப்போம் என்றும் தெரிவித்தனர்.
தென்கொரிய அரசு தாலிபன் தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்க முன்வந்தது. இதையடுத்து தாலிபன் தீவிரவாதிகள் அதனை வரவேற்கும் விதமாக முதலில் 3 தென்கொரியர்களை விடுவித்தனர். அவர்கள் தாலிபன் மலைவாழ் மக்கள் மூலம் செஞ்சிலுவை இயக்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
எஞ்சியுள்ள 16 பிணைக் கைதிகளை நாளை விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications