2 மகன்களைக் கொடூரமாகக் கொன்றதந்தைக்கு இரட்டை ஆயுள்
வேலூர்:மனைவியின் நடத்தை மீது கொண்ட சந்தேகத்தால் தனது இரு மகன்களையும் மலைப் பாறையில் மோதச் செய்து கொடூரமாகக் கொன்ற தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் மிட்டாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வநாதன். இவருக்கு வனஜா (35) என்ற மனைவி உள்ளார். மற்றும் ஹரிபாபு (7), அரவிந்தன் (5) என இரு மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில் வனஜாவின் நடத்தை மீது திடீரென சந்தேகம் வந்தது வில்வநாதனுக்கு. தனது இரு மகன்களும் தனக்குப் பிறக்கவில்லையோ என சந்தேகம் அடைந்தார்.
இந்த நிலையில், தனது நிலங்கள் சிலவற்றை விற்க தீர்மானித்தார் வில்வநாதன். ஆனால் அதை எதிர்த்த வனஜா அவற்றை பிள்ளைகள் பெயரில் எழுதி வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வனஜாவுடன் சண்டை போட்டார் வில்வநாதன்.
கடந்த 2002ம் ஆண்டு மே மாதம் தனது தாயார் வஜ்ரம்மாள் வீட்டுக்கு பிள்ளைகள் இருவரையும் விடுமுறைக்காக அனுப்பி வைத்தார் வனஜா. இந்த நிலையில், மே 31ம் தேதி தனது மாமியார் வீட்டுக்குப் போனார் வில்வநாதன். அங்கிருந்த தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு கைலாசகிரி மலைக்கு கூட்டிச் சென்றார்.
அங்கு போனதும், இரு மகன்களையும் பாறையில் மோத வைத்து கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக வில்வநாதனை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது திருப்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எத்திராஜ், பிள்ளைகளை கொடூரமாகக் கொன்ற வில்வநாதனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications