சென்னையில் விடிய விடிய மழை:போக்குவரத்து பெரும் பாதிப்பு
சென்னை:தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கன மழை பெய்துள்ளது. சென்னை நகரில் விடிய விடிய இடி, மின்னலுடன் மழை பெய்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில், ஆந்திர மாநிலக் கடலோரம், வளி மண்டலத்தில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.
நேற்று அதிகாலையில் சென்னை நகரில் கன மழை பெய்தது. இதனால் நகர் முழுவதும் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. விடிய விடிய கொட்டிய இந்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கிக் காணப்பட்டது.
மேலும் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கும் குப்பைகளும் மழை நீரில் கலந்து ஓடி வந்து சாலைகளில் சிதறிக் கிடப்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
கன மழை காரணமாக நகரின் சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதேபோல தஞ்சையில் சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது. இதில் பல இடங்களில் மரங்கள் கீழே விழுந்தன. ஒரு இடத்தில் மின்சாரக் கம்பிகள் உரசிக் கொண்டதால் ஏற்பட்ட பொறியில், 3 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும், இரவு நேரங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications