மாறி மாறி கொலை மிரட்டல் புகார் கொடுத்தநகராட்சி கமிஷனர், தமுமுக தலைவர்!
நெல்லை:நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி ஆணையரும், தமுமுக முன்னாள் தலைவரும் மாறி மாறி போலீஸில் கொலை மிரட்டல் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையநல்லூர் நகராட்சி 31-வது வார்டு பகுதியில் தெரு விளக்கு, குடிநீர், சுகாதார பிரச்சனைகளில் கமிஷனர் மதிவாணன் அலட்சியம் காட்டுவதாக கூறி அந்த வார்டு மக்கள், தமுமுக முன்னாள் தலைவரும் வார்டு கவுன்சிலர் நூர்ஜஹானின் கணவருமான சித்திக் பீர் முகமது தலைமையில் போராட்டம் நடத்தினர்.
அந்தப் போராட்டத்தின் போது நகராட்சி கமிஷனர் அறைக்கு பூட்டுக்கு மேல் பூட்டு போட்டு பூட்டி விட்டுச் சென்றனர்.
இந்த நிலையில் சித்திக் பீர் முகமது போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், என்னுடைய அறையை எப்படி பூட்டலாம் என எச்சரித்த ஆணையர் என்னையும், என் குடும்பத்தையும் அழித்து விடுவதாக போனில் மிரட்டியதாகவும், இதனால் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என போலீசில் புகார் கொடுத்தார்.
இதற்கு பதிலடியாக ஆணையர் மதிவாணன் கடையநல்லூர் போலீசில் சித்திக் பீர் முகமது மீது ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில் நான் வீட்டில் இருக்கும்போது என்னுடைய அறையை வார்டு மக்களுடன் வந்து சித்திக் முகமது மேல் பூட்டு போட்டு பூட்டியுள்ளார். இது குறித்து போனில் நான் அவரிடம் கேட்டதற்கு என்னையும் நகராட்சி அலுவலகத்தையும் வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவதாக மிரட்டினார்.
ஆகவே எனக்கும் நகராட்சி அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பு புகார்கள் குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications