குண்டுவெடிப்பு: பிடிபட்ட வங்கதேசப் பெண்br/வேலூரில் கைதான பரபரப்பு தகவல்!
சென்னை:
ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஹைதராபாத் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள வங்கதேசப் பெண், வேலூரில் வைத்துத்தான் கைது செய்யப்பட்டதாக தற்போது பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தெடார்பாக வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் லஜ்ஜாஜினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். அவரை போலீஸார் தேடி வருவதாக ஹைதராபாத் போலீஸார் தெரிவித்திருந்தனர்.
முதலில் இந்தப் பெண் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் படித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மறுத்தது.
இந்த நிலையில் அப்பெண் கைது செய்யப்பட்ட விவரத்தை டிஜிபி ராஜேந்திரன் இன்று விளக்கினார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஆந்திர போலீஸார் வேலூரில் ஒரு மாணவியைக் கைது செய்துள்ளனர். அவரது பெயர் லஜ்ஜாஜினி.
ஹைதராபாத்திலிருந்து வந்த தனிப்படை போலீஸார் அந்த மாணவியைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், 2008ம் ஆண்டு வரை இந்தியாவில் தங்கிப் படிக்க மாணவர் விசாவில் வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது என்றார்.
லஜ்ஜாஜினி, காட்பாடியில் உள்ள காந்தி நகர் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளார். மாதம் ரூ. 500 வாடகையாக தந்துள்ளார். அவருடன் அவரது சகோதரரும் தங்கியுள்ளார்.
வேலூரில் உள்ள ஆக்ஸீலியம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.ஏ. ஆங்கிலப் படிப்பை படித்து வந்துள்ளார் லஜ்ஜாஜினி.
ஹைதராபாத் சம்பவத்திற்குப் பிறகு இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலையில்தான் ஆந்திர போலீஸார் லஜ்ஜாஜினியைக் கைது செய்தனர். ஆனால் அவரது சகோதரர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
லஜ்ஜாஜினியும், அவரது சகோதரரும் தங்கியிருந்த வீட்டில் இன்று போலீஸார் சோதனை நடத்தினர். பின்னர் வீட்டைப் பூட்டி போலீஸார் சீல் வைத்தனர்.












Click it and Unblock the Notifications