கருணாநிதி, ராமதாஸ் கோரிக்கையை ஏற்றுbr/உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் நெடுமாறன்
சென்னை:
முதல்வர் கருணாநிதியின் உறுதிமொழியை ஏற்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார். முதல்வர் கருணாநிதியின் தூதராக நெடுமாறனை சந்தித்துப் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நெடுமாறனுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
இலங்கைத் தமிழர்களுக்கு வழங்குவதற்காக தமிழர் தேசிய இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ரூ. 1 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.
இதைக் கண்டித்து தானே படகுகள் மூலம் அவற்றை எடுத்துச் செல்லப் போவதாக அறிவித்து நாகைக்கு நூற்றுக்கணக்கோருடன் சென்றார் நெடுமாறன். ஆனால் அதற்கு அரசு அனுமதிக்கவில்லை, நெடுமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து நெடுமாறன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தெடாங்கினார். சென்னையில் கோயம்பேட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் அவர் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
நெடுமாறன் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதி அவருக்குக் கடிதம் அனுப்பினார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க முடியாத நிலையில் இருப்பதாக நெடுமாறன் பதிலளித்தார்.
நெடுமாறன் உடல் நிலைக்கு மணிக்கு மணி மோசமடைந்து வந்தது. அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன் உள்ளிட்ட பலரும் சந்தித்தார்கள்.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியின் தூதராக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று நெடுமாறனை சந்தித்தார். அப்போது, நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப ஆவண செய்யப்படும், அதற்குரிய நடவடிக்கைகளை தான் கண்டிப்பாக எடுப்பதாக முதல்வர் உறுதியளித்திருப்பதாக ராமதாஸ், நெடுமாறனிடம் தெரிவித்தார்.
மேலும் உங்களது கோரிக்கைக்கு நான் முழு ஆதரவு தெரிவிக்கிறேன். உங்களது லட்சியம் நிறைவேற நான் உறுதுணையாக இருப்பேன் என்றும் தனிப்பட்ட முறையில் நெடுமாறனிடம் உறுதியளித்தார் ராமதாஸ்.
இதையடுத்து முதல்வரின் உறுதிமொழிக்கு மதிப்பு ெகாடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக நெடுமாறன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து பழச்சாறு வரவழைக்கப்பட்டது. அதை தனது கையாலேயே ராமதாஸ், நெடுமாறனிடம் அளித்துப் பருகச் செய்தார்.
இதையடுத்து நெடுமாறன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டாக்டர் ராமதாஸ், நெடுமாறனை சந்தித்து முதல்வரின் உறுதிமொழியைக் கூறி உண்ணாவிரததத்தை வாபஸ் பெற வைத்த சமயத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் உடன் இருந்தார். வைகோவும் நெடுமாறனின் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications