பிளஸ்டூ, பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்!
சென்னை:
பிளஸ்டூ மற்றும் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாமுக்கு சென்னை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகமும், எக்ஸ்பர்டர்ஸ் நிறுவனமும் இணைந்து பிளஸ்-2, பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம் ஆகிய பட்டப் படிப்புகளை 2003ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் முடித்தவர்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாமை நடத்துகிறது.
வருகிற 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் 2 மணி வரை சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை வருமானவரி அலுவலகத்தில் அமைந்துள்ள அசம்சன் மேல்நிலைப் பள்ளியில் இது நடைபெறுகிறது.
இந்த முகாமில் முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ், ஏ.ஐ.ஜி., ஸ்பர்ஷ் பி.பி.ஓ., ஆப்டிமஸ் பி.பி.ஓ., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் ஏ.டி.டி. கியோஸ்க் ஆகியவை கலந்து கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில கால் சென்டர்கள், கஸ்டமர் சர்வீஸ், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் போன்ற பணியிடங்களுக்கு 600க்கும் மேற்பட்டவர்களை நியமனம் செய்ய உள்ளன.
இந்த முகாமில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மாத ஊதியம் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும். ஊதியத்துடன் பிராவிடன்ட் பண்ட், இ.எஸ்.ஐ. ஆகிய சலுகைகளும் அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு அன்றைய தினமே நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. எனவே பங்கேற்க வருபவர்கள் தங்கள் கல்வித் தகுதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பயோ டேட்டா ஆறு நகல்கள் மற்றும் 3 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.