வஙகக் கடலில் புயல் சின்னம்-ஆந்திரா, ஒரிஸ்ஸாவில் கனமழை, தமிழத்திலும்
ஹைதராபாத்:
வங்க கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிஸ்ஸா பகுதியை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால் ஆந்திரா, ஒரிஸ்ஸா, கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன் வங்கக் கடலில் ஆந்திர அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இதனால் ஆந்திராவில் கன மழை பெய்து வருகிறது. இதில் ராயல்சீமா பகுதி மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகிறது. பல பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன.
இப்போது இந்த காற்றழுத்த மண்டலம் மேற்கு-மத்திய வங்கக் கடல் முழுவதும் பரவி வருவதோடு தீவிரமும் அடைந்து வருகிறது. மேலும் இது வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிஸ்ஸா நோக்கியும் நகர்ந்து வருகிறது.
இதனால் அடுத்த 3 நாட்களுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், கோவா, சத்தீஸ்கர் மாநிலங்களிலும் கன மழை பெய்யும்.
தமிழகத்திலும்...
இந்த புயல் சின்னத்தால் தமிழ்நாடு மற்றும் கேரளத்திலும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆராயச்சி மையம் அறிவித்துள்ளது.