கருணாநிதி, ராவணன் கொடும்பாவிகளை எரிக்க காங். தலைவர் கோரிக்கை!
ஜலந்தர்:
வருகிற தசரா பண்டிகையின்போது முதல்வர் கருணாநிதி மற்றும் ராவணன் ஆகியோரின் கொடும்பாவிகளை நாட்டு மக்கள் எரிக்கு வேண்டும் என அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணித் தலைவரும், காங்கிரஸ் பிரமுகர்களில் ஒருவருமான மணீந்தர் சிங் பிட்டா கோரிக்கை விடுத்துள்ளஆர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பிட்டா, பலமுறை தீவிரவாதிகளின் தாக்குதலிருந்து உயிர் தப்பியவர். இந்தத் தாக்குதலில் அவரது கால் பறி போய் விட்டது. இதையடுத்தே அவர் பயங்கரவாத தடுப்பு முன்னணி என்ற அமைப்பை ஆரம்பித்தார்.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதி மற்றும் ராவணன் ஆகியோரின் கொடும்பாவிகளை எரிக்க வேண்டும் என 'பயங்கரமான' ஒரு கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
ஜலந்தரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வருகிற தசரா பண்டிகையின்போது முதல்வர் கருணாநிதி மற்றும் ராவணனனின் கொடும்பாவிகளை சேர்த்து எரிக்க வேண்டும்.
ராமர் குறித்து அவதூறாகப் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. ராமர் பாலம் விவகாரம் தொடர்பாக அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
அரசியல்வாதிகள் மக்களின் இறை நம்பிக்கையோடு விளையாடக் கூடாது. அது மத தீவிரவாதத்தில் கொண்டு போய் விட்டு விடும்.
ராமர் பாலத்தை உடைக்காமல் தடுக்க மக்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். இதில் அரசியல் பார்க்கக் கூடாது.
ராமர் பாலத்தை இடிக்காமல் தடுக்க நடக்கும் போராட்டத்தில் எனது உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். முதல் ஆளாக எனது உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்.
அரசியல்வாதிகள் மதத்தின் பெயரால் பிரச்சினைகளை ஏற்படுத்துவதைத் தடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்.
மேலும், நாட்டில் உள்ள அனைத்து சங்கராச்சாரியார்களையும் சந்தித்து ராமர் பாலத்தை உடைப்பதைத் தடுத்து நிறுத்துவது குறித்து ஆலோசிக்கவுள்ளேன்.
டெல்லி, சென்னை, சண்டிகர், மும்பை, லக்னோ ஆகிய நகரங்களில் ராமர் பாலத்தைக் காக்க வலியுறுத்தி மக்கள் ஆதரவைத் திரட்ட மாநாடுகளையும் நடத்தவுள்ளேன் என்றார் பிட்டா.












Click it and Unblock the Notifications