கர்நாடக ஆட்சி மாற்றம்: குழப்பும் குமாரசாமி; ஜனாதிபதி ஆட்சியைக் கோரும் காங்.!
பெங்களூர்:
பாஜகவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அக்டோபர் 3ம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என நேற்று பிற்பகலில் கூறிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, மாலையில் அதற்கு முரணாக பேட்டி அளித்ததால் கர்நாடக அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
கர்நாடகத்தில் பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன. ஆளுக்கு 20 மாதங்கள் ஆட்சி நடத்துவது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற அக்டோபர் 3ம் தேதி பாஜகவிடம், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும். ஆனால் அதில்தான் சிக்கல் எழுந்துள்ளது. திட்டமிட்டபடி ஆட்சியை ஒப்படைக்காமல் தானே தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க மதச்சார்பற்ற ஜனதாதளம் திட்டமிட்டுள்ளது.
அந்த நோக்கத்தில்தான் அக்கட்சி சமீப காலமாக செயல்பட்டு வருகிறது. மேலும், சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் ஸ்ரீராமுலு, முதல்வர் குமாரசாமி மீது கொலை முயற்சி புகார் ஒன்றை போலீஸில் கொடுத்ததால் பாஜக மீது மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி பெரும் அதிருப்தி அடைந்துள்ளது.
கதவை மூடிய கெளடா ..
இந்த நிலையில் மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியின் தலைவர் தேவெ கெளடா டெல்லி சென்றிருந்தார். அவர் பாஜக தலைவர்களைச் சந்தித்து ஆட்சி மாற்றம் குறித்து விவாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வெறுமனே அங்கிருந்து திரும்பி பெங்களூர் வந்து சேர்ந்ததார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கெளடா, பேச்சுவார்த்தைக்கு ஏற்ற சூழ்நிலை தற்போது இல்லை. அதை முதலில் பாஜகவினர் உருவாக்க வேண்டும். அதுவரை பேச்சு நடத்த முடியாது.
பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை குமாரசாமி இப்போதாவது புரிந்து கொள்ளட்டும் என்றார்.
திட்டமிட்டபடி ராஜினாமா - குமாரசாமி
இந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் மத்தியில் எனது பெயர் கெடுவதை நான் விரும்பவில்லை. கொடுத்த வாக்குறுதியிலிருந்து விலகிச் செல்ல நான் விரும்பவில்லை. திட்டமிட்டபடி அக்டோபர் 3ம் தேதி எனது பதவியை ராஜினாமா செய்வேன் என்றார் குமாரசாமி.
ஆனால் அவசரப்பட்டு ராஜினாமா முடிவை எடுக்க வேண்டாம் என குமாரசாமியை மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முடிவெடுக்கவில்லை - குமாரசாமி
இந்த நிலையில் நேற்று இரவு அளித்த ஒரு பேட்டியில், இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இன்னும் பத்து நாள் அவகாசம் உள்ளது. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகுதான் நாங்கள் முடிவாக எதையும் தீர்மானிக்கவுள்ளோம். அக்டோபர் 3ம் தேதிதான் அனைத்தும் தெளிவாகும் என்று மழுப்பலாக பேசினார்.
இதன் காரணமாக ஆட்சி மாற்றம் நடக்குமா, குமாரசாமி பதவி விலகுவாரா என்ற பெரும் குழப்பம் கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள்ளது.
டிஸ்மிஸ் செய்ய காங். கோரிக்கை
இந்த நிலையில், கர்நாடக அரசியலில் பெரும் குதிரை பேரம் நடக்கும் வாய்ப்பு உருவாகி வருவதால் ஆட்சியை டிஸ்மிஸ் செய்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், இப்போது இங்கு நடப்பது காட்டு ராஜ்யம். எம்.எல்.ஏக்களை விலை பேசி வருகிறார்கள். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எனவே ஆட்சியை டிஸ்மிஸ் செய்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கார்கே கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications