சேது சமுத்திரத் திட்டத்தை ஆராய அமைச்சர்கள் குழு - டி.ஆர். பாலு
டெல்லி:
சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்துப் பரிசீலிக்க, பல்வேறு அமைச்சர்கள் இணைந்த கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராமர் பாலத்தை இடிக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது, இன்னும் 3 மாதங்களில் இந்த் திட்டம் தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள், புகார்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, சுமூக நிலையை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது.
ஆனால் மத்திய அரசின் இந்த உத்தரவாதத்திற்கு திமுக ஆட்சேபனை தெரிவித்தது. திட்டம் அமல்படுத்தப்பட்டு, முடியும் தருவாயை நெருங்கியுள்ள நிலையில் திட்டம் தொடர்பான பரிசீலனை என்பது சரியான செயலாக இருக்காது என திமுக தரப்பில் மத்திய அரசிடம் கூறப்பட்டது.
ஆனால் தற்போது பல்வேறு அமைச்சகங்கள் இணைந்த கூட்டுக் குழுவை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ராமர் பாலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கப்பல்துறை, சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சட்டத்துறை அமைசர்கள் இந்த கூட்டுக் ழுவில் இடம் பெற்றிருப்பர். அனைவரும் இணைந்து 3 மாதங்களுக்குள், சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான எதிர்ப்புகள், ஆட்சேபனைகள் உள்ளிட்டவை குறித்துப் பரிசீலித்து சுமூக நிலையை உருவாக்க முனைவார்கள் என்றார் பாலு.
அடுத்த வாரம் இந்த கூட்டுக் குழு குறித்த முறையான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவுள்ளது.