வங்கி அடியாட்கள் மிரட்டியதால் கையைத் துண்டித்து தற்கொலை!
சென்னை:
சென்னையில் வங்கியில் வாங்கிய கடனைச் செலுத்தத் தவறியதற்காக வங்கி அனுப்பிய அடியாட்கள் ஆபாசமாக திட்டி மிரட்டியதால் வருத்தமடைந்த 45 வயது நபர் கை நரம்புகளைத் துண்டித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வில்லிவாக்கத்தில் வசித்து வந்தவர் கோபிநாத். இவர் நான்கு வங்கிகளில் பெருமளவு கடன் வாங்கியிருந்தார். ஆனால் எந்தக் கடனையும் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் ஒரு வங்கியைச் சேர்ந்த பண மீட்பு குழுவினர் (அடியாட்கள் போல செயல்படுபவர்கள் இவர்கள்) கோபிநாத்தின் வீட்டுக்கு வந்து ஆபாசமாக பேசி கோபிநாத்தையும், அவரது மனைவியையும் திட்டியுள்ளனர்.
இதனால் மனம் உடைந்த கோபிநாத், தனது கை மணிக்கட்டைத் துண்டித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோபிநாத்தின் மனைவி வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கோபிநாத்தின் உடலை வாங்கிக் கொள்ளப் போவதில்லை என்று அவரது மனைவி கூறி விட்டதால் உடல் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மிரட்ட வந்த கும்பல்:
கோபிநாத் தற்கொலை செய்தது தெரியாமல் வங்கி கடன் ஏஜென்டுகள் மீண்டும் அவரை மிரட்ட வந்துள்ளனர். ஆனால் அங்கு வந்த பிறகுதான் விஷயம் தெரிந்து அங்கிருந்து தப்பி ஓடினர். அங்கிருந்த பொதுமக்கள் கடன் வசூல் செய்ய வந்த ஏஜெண்டுகளை விரட்டி பிடித்தனர்.
இதில் ஐசிஐசிஐ வங்கியை சேர்ந்த வேதகிரி, பிரசன்னா, ஸ்டேட் பாங்கை சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் கோட்டாக் மகேந்திரா வங்கியை சேர்ந்த ஜான் ஸ்டீபன் ஆகியோரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இவர்களிடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications