துபாயில் 'இறைவாக்கும் நபி வாழ்வும்' நூல் வெளியீடு
துபாய்:
துபாய் ஏகத்துவ மெய்ஞானசபையில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்கள் எழுதிய 'இறைவாக்கும் நபிவாழ்வும்' எனும் நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் எம்.ஜெ. முஹம்மது இக்பால் விழாவிற்கு தலைமை வகித்து, நூலை வெளியிட்டு உரை நிகழ்த்தினார். பெருங்கவிக்கோ அவர்கள் சகோதர சமுதாய மக்களிடையே குறிப்பாக இஸ்லாமிய மக்களிடம் கொண்டுள்ள அன்பை, நட்பை விவரித்தார். அவர்களின் தமிழ்ப்பணி குறித்து விவரித்தார்.
ஏற்புரை நிகழ்த்திய பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் இஸ்லாமிய தமிழ் ஞான சிறப்பு மற்றும் இஸ்லாமியர்களுடன் தனக்குள்ள தொடர்பு குறித்தும், தனது தமிழ்ப் பணிக்கு அவர்கள் கொடுத்து வரும் அபரிமிதமான ஒத்துழைப்பு குறித்தும் விரிவாகப் பேசினார்.
மேலும் மெய்ஞான சபை ஞானக்கடல் இமாம் கலீல் அவ்ன் மெளலானா அவர்களுடன் உள்ள தொடர்பு குறித்தும் விவரித்தார்.
சபையின் கவிஞர்கள் பெருங்கவிக்கோவின் சேவைகளை பாராட்டிப் பேசினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்.ஜே. அப்துல் ரவூப், இம்தியாஸ் உள்ளிட்டோர் சிறப்புற செய்திருந்தனர்.