பந்த்துக்குப் பதில் நாளை உண்ணாவிரதம்; சென்னையில் கருணாநிதி பங்கேற்பு!
சென்னை:
தமிழக பந்த்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்டதால், பந்த்துக்குப் பதிலாக தமிழகம் முழுவதும் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். திருவல்லிக்கேணியில் கருணாநிதி உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளார்.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி நாளை தமிழகம் முழுவதும் பந்த் நடத்த திமுக கூட்டணி அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்தது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் திமுக கூட்டணி பெரும் அதிர்ச்சி அடைந்தது.
இதையடுத்து பந்த் நடத்தத் திட்டமிட்டப்பட்ட நாளைய தினம் திமுக கூட்ணி சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக அணியினர் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருப்பார்கள். சென்னையில் திருவல்லிக்கேணியில் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறுக்கே நிற்கும் நந்திகள் - கருணாநிதி ஆவேசம்
நாளைய உண்ணாவிரதப் போராட்டம் குறித்து முதல்வர் கருணாநிதி கூறுகையில், தமிழர்களுக்கு நலம் பயக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற சில நந்திகள் குறுக்கே நிற்கின்றன. இதற்கு வருத்தம் தெரிவித்தே நாளைய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
உண்ணாவிரதப் போராட்டம் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து, ஒருமித்த முறையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
புதுவையிலும் நாளை உண்ணாவிரதம்:
தமிழகத்தைப் போலவே புதுவை மாநிலத்திலும் திமுக கூட்டணியினர் நாளை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.
இதுகுறித்து மாநில திமுக அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன் கூறுகையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் உத்தரவுப்படி புதுச்சேரியிலும் நாளை சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
இந்தப் போராட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பங்கேற்கும். புதுச்சேரி, வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகே இந்தப் போராட்டம் நடைபெறும் என்றார்.