உலகிலேயே அதிவேக ஏவுகணை 'பிரமோஸ்'!
நாகர்கோவில்:
உலகிலேயே அதிவேக ஏவுகணை இந்தியாவிடம் உள்ளது என்று டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை கூறியுள்ளார்.
ஏவுகணை விஞ்ஞானியான சிவதாணு பிள்ளை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவில் வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்தியா இதுவரை 5 வகையான ஏவுகணைகளை தயாரித்துள்ளது. அதில் முக்கியமானது அக்னி ஏவுகணை. இந்த ஏவுகணை 2000 கிமீ வேகத்தில் சென்று தாக்கக் கூடிய சக்தி வாய்ந்தது.
இதை ஏவும்போது 500 கிமீ தூரம் மேல்நோக்கி சென்று பின்னர் 85 கிமீ தூரம் திரும்பி வந்து துல்லியமாக இலக்கை தாக்கும் திறன் கொண்டதாகும்.
இதே போல் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இன்னொரு ஏவுகணை பிரமோஸ் ஏவுகணையாகும். இந்த ஏவுகணை இந்தியா-ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவானது.
பிரமோஸ் போன்ற சூப்பர் சானிக் ஏவுகணை எந்த நாட்டிலும் கிடையாது. கப்பலில் இருந்து மற்றெரு கப்பலை தாக்க வேண்டுமானாலும் சரி, நிலப்பரப்பு பகுதியை தாக்க வேண்டுமானாலும் சரி 300 கிமீ தொலைவு சென்று அதிவேகமாக தாக்க கூடியது. இந்த ஏவுகணையின் வேகம் ஒலியை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
குறிப்பிட்ட தூரத்தில் இருந்து குறிப்பிட்ட இலக்கை அதிவேகமாக சென்று தாக்கும் இந்த ஏவுகணை தான் உலகின் முதன்மையான ஏவுகணையாக உள்ளது. இந்த ஏவுகணையை இந்திய கப்பல் படைக்கும், ராணுவத்துக்கும் வழங்கி வருகிறோம்.
200 வகையான பொருட்கள்:
ஏவுகணை தயாரிக்கப் பயன்படும் பொருட்களில் இருந்து செயற்கை கால் (காலிபர்), பேஸ்மேக்கர், டைபாய்டு காய்ச்சல் சோதனை கருவி, உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து கொடுக்கிறோம். அவை அனைத்தும் மருத்துவ பயன்பாடுகள் கொண்டவையாகும்.
ராணுவ வீரர்களுக்காக நாங்கள் தாயரிக்கும் மருத்துவ சாதனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
சாதாரணமாக ஒருவருக்கு டைபாய்டு காய்ச்சல் இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள 3 நாட்கள் ஆகும். ஆனால் நாங்கள் தயாரிக்கும் டைபாய்டு டெஸ்ட் கிட் மூலம் 3 நிமிடத்தில் கண்டுபிடித்து விட முடியும் என்றார் சிவதாணுப்பிள்ளை.