திரைப்பட பத்திரிக்கையாளர் சங்க நியூஸ் லெட்டர்!
திரைப்பட பத்திரிக்கையாளர் சங்க, அதிகாரப்பூர்வ செய்தி மடலை தமிழக செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வெளியிட்டார்.
சென்னையில் உள்ள திரைப்பட பத்திரிக்கையாளர்கள் இணைந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கம் அமைத்தனர். 2005ம் ஆண்டு 50 உறுபப்பினர்களுடன் உருவான இந்த சங்கத்தை நிறுவியர் அய்யப்ப பிரசாத்.
கடந்த ஆண்டு சங்கத்திற்கு நடந்த நிர்வாகிகள் தேர்தலில் தமிழன்பன் தலைவராகவும், ரவிசங்கர் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சங்கத்தின் சார்பில் புதிய செய்தி மடலை உருவாக்க திட்டமிடப்பட்டது. அக்டோபர் மாதம் முதல் இந்த இதழைக் கொண்டு வரவும் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி செய்தி மடல் என்ற பெயரில் உருவாகியுள்ள இதழ் அமைச்சர் பரிதி இளம்வழுதியால் வெளியிடப்பட்டது.
அவரது இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல் இதழை பரிதி இளம்வழுதி வெளியிட்டு வாழ்த்தினார்.
முன்னதாக சங்கத் தலைவர் தமிழன்பன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் வழங்கினார். திரைப்பட பத்திரிக்கையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை, இலவச பஸ் பாஸ், வீட்டு மனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அமைச்சரிடம் வழங்கப்பட்டது.
இந்தக் கோரிக்கைகள் குறித்து பரிவுடன் பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். திரைப்பட பத்திரிக்கையாளர்களின் கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
நிகழ்ச்சியின்போது பத்திரிக்கையாளர் சங்க துணைத் தலைவர் வேணுஜி, இணைச் செயலாளர்கள் ராதா ராஜ், பிஸ்மி, பொருளாளர் மேஜர் தாசன், செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர் எஸ்.சங்கர், முத்து ரத்தின சக்திவேல் ஆகியோரும் உடன் இருந்தனர்.