உளவுப் பிரிவு மீது திருமா. பாய்ச்சல்
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெளியீட்டுப் பிரிவு செயலாளர் வன்னியரசுவைக் கைது செய்ய மத்திய உளவுப் பிரிவு செய்த சதியே காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்த முயன்றதாக கூறி தமிழக கியூ பிரிவு போலீஸார் வன்னியரசுவைக் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலை சிறுத்தைகள் வெளியீட்டு அணிச் செயலாளரும், தமிழ்மண் இதழின் பொறுப்பாசிரியருமான ஜெயராஜ் என்ற வன்னி அரசுவை கடந்த 10ம் தேதி விசாரணை என்ற பெயரில் கியூ பிரிவு போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் 11ம் தேதி விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளார் என்று வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ததாக செய்திகள் பரவின.
ஆனால் தற்போது அவர் ஜாமீனில் விடுதலை ஆகி வெளியே வந்துள்ளார். வன்னிஅரசு என்ற பெயரில் நார்வே நாட்டில் இருந்து ஒரு பார்சல் கப்பல் மூலமாக அவருக்கு வந்துள்ளதாகவும், அதில் விடுதலைப்புலிகள் பயன்படுத்தும் அதிவேக படகுகளுக்குரிய ஆற்றல் கொண்ட எந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் இருந்தன.
இதன்மூலம் வன்னிஅரசு, விடுதலைப்புலிகளுக்கு தொடர்ந்து ஆயுதங்களை கடத்திக் கொண்டிருக்கிறார் என்றும் யூகத்தின் அடிப்படையில் உளவுத்துறையினர் மற்றும் தமிழக கியூ பிரிவு போலீசார் மாறி மாறி தொடர்ந்து அவரை விசாரித்துள்ளனர்.
ஆயுதங்களையோ அல்லது வேறு பொருட்களையோ கடத்தக்கூடியவராக இருந்திருந்தால் வன்னிஅரசு தன் பெயரிலேயே தான் தங்கியிருக்கிற வீட்டு முகவரிக்கே அனுப்புமாறு கோரியிருப்பாரா?. சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் தனது வெளிநாட்டு நண்பரிடம் உதவி கோரியிருக்கிறார்.
அவர் வன்னிஅரசு முகவரிக்கு அனுப்பிவிட்டதாக தகவல் தந்ததன் அடிப்படையில் அதை பெறச் சென்ற போது மத்திய அரசின் வருவாய புலனாய்வுத்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவரிடம் பார்சலை வழங்காமல் அனுப்பி விட்டனர்.
இந்த நிலையில் தான் மத்திய உளவுத்துறையினரும், தமிழக போலீசாரும் வன்னிஅரசுவை விசாரணைக்கு அழைத்து வந்து அவரை மிரட்டி வெற்று தாள்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். மேலும் அவர்மீது விடுதலைப்புலிகளுடன் தொடர்பில் இருக்கிறார் என்று ஒரு பொய்யான வழக்கை போட்டுள்ளனர்.
வன்னிஅரசு தனது இயற்பெயரான ஜெயராஜ் என்கிற பெயரில் தான் பாஸ்போர்ட் பெற்றுள்ளார். அதனால் அவர் போலி பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார் என்பது அப்பட்டமான பொய்.
நாங்கள் இடம் பெற்றிருக்கும் திமுக கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி மீது பழியைச் சுமத்தி, தமிழக அரசுக்கு நெருக்கடியை தர வேண்டும் என்கின்ற உள் நோக்கத்துடன், மத்திய உளவுத்துறையை சேர்ந்த சில அதிகாரிகள் இந்த சதி வலையைப் பின்னியுள்ளதாக தெரிகிறது.
ஈழ விடுதலைக்கு ஆதரவாக தார்மீக அடிப்படையில் வெளிப்படையாக ஆதரவு கொடுத்து வருவதாலும், சேது கால்வாய்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் மத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதாலும், காழ்ப்புணர்ச்சி கொண்ட சில மத்திய உளவுத்துறை அதிகாரிகள் சிலர் விடுதலைச்சிறுத்தைகள் இயக்கத்துக்கும் குறிப்பாக எனக்கும் அரசியல் ரீதியான நெருக்கடியைத் தரவேண்டும் என்று செயல்படுவதாக தெரிகிறது.
இதனை நாங்கள் முறியடிப்போம். வன்னி அரசு மீதான பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று தொல். திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications