தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை பயன்படுத்துவதா? ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் கொடுத்த பதில் மனு
சென்னை: தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளோம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தேவைப்பட்டால் விதிகள் வகுக்கப்படும் எனவும் குழந்தைகளை தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்தக்கூடாது என ஏற்கனவே வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் விஜய் குழந்தைகளை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் இவ்வாறு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையம் பதில் மனு
2026 சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது, குழந்தைகளை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியது போன்ற செயல்களில் ஈடுபட்ட திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக சுதந்திரமாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கடலூரை சேர்ந்த வாசுகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில் தேர்தல் ஆணையம் கூறியதாவது:-
வாக்காளர் சுட்டிக்காட்டவில்லை
பணப்பட்டுவாடா தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக அதை கையாள்வதற்கு ஏற்கனவே தேவையான சட்டப்பிரிவுகள் உள்ளன. அந்த காரணத்தின் அடிப்படையில் தேர்தல் வழக்கும் தாக்கல் செய்யலாம். பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக பறக்கும் படை, கண்காணிப்பு குழு ஆகியவை உள்ளது. கடந்த தேர்தலில் மட்டும் 599.24 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் மீது செல்வாக்கை செலுத்துவதும் ஒரு வகையில் ஊழல் நடவடிக்கைதான். குழந்தைகளை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் விவகாரத்தில், ஏற்கனவே அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த வழக்கை பொறுத்தவரை குறிப்பிட்ட எந்த ஒரு சம்பவத்தையும் வாக்காளர் சுட்டிக்காட்டவில்லை. வாக்காளர்கள் அனைவரும் வயது வந்தவர்கள். சொந்தமாக சிந்தித்து வாக்களிக்க கூடியவர்கள்.
விதிகள் வகுக்கப்படும்
குறிப்பிட்ட எந்த ஒரு கட்சிக்கும் வாக்களிக்கும்படி அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. அந்த வகையில் குழந்தைகளை பிரசாரத்திற்கு பயன்படுத்தியது தொடர்பாக ஆய்வு செய்ய இருப்பதாகவும், இது தொடர்பாக விதிகள் வகுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.














Click it and Unblock the Notifications