போதையில் ரகளை-அதிமுக கவுன்சிலருக்கு எஸ்.ஐ அடி, உதை
பெரியகுளம்:
பெரியகுளம் பஸ் நிலையத்தில் குடி போதையில் ரகளை செய்த அதிமுக கவுன்சிலருக்கு அடி, உதை விழுந்தது. பின்னர் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பெரியகுளம் வடகரை பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் ராஜா முகம்மது. அதிமுகவைச் சேர்ந்த இவர், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, அப்பகுதியின் 7வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.
இவர் நன்றாக குடித்துவிட்டு, பெரியகுளம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டு வருவோர் போவோரை எல்லாம் ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.
கவுன்சிலரின் அட்டகாசம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வந்து கவுன்சிலர் ராஜாமுகமதுவை வீட்டுக்கு போகச் சொல்லி அறிவுரை வழங்கினார்.
ஆனால் ராஜாமுகம்மது சப் இன்ஸ்பெக்டர் சுரேஷையும் தரக்குறைவாக பேசியதுடன் அவரிடமும் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்.ஐ சுரேஷ் அதே இடத்தில் வைத்து அதிமுக கவுன்சிலர் ராஜாமுகமதுவை நன்றாக 'கவனித்தார்'.
கிடைத்து அடி, உதையில் அடங்கிய ராஜா முகம்மதுவை எஸ்.ஐ கைது செய்தார்.
பின்னர் விடுதலை செய்யப்பட்ட ராஜா முகம்மது, தன்னை போலீசார் வேண்டுமென்றே தாக்கிவிட்டதாகக் கூறி மதுரை அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார்.