தலித் ஏர் ஹோஸ்டஸ்களுக்கு பணி நியமன உத்தரவு
சென்னை:
விமான பணிப்பெண் பயிற்சி முடித்த 10 ஆதிதிராவிட பெண்களுக்கு பணி நியமன ஆணையை திமுக எம்.பி. கனிமொழி வழங்கினார்.
தமிழக அரசின் ஆதி திராவிட நலத்துறை சார்பில் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பெண்கள் 100 பேருக்கு இலவச விமானப் பணிப்பெண் பயிற்சி சென்னையில் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சிக்கு தலா ரூ.1 லட்சம் ஆகும் என மதிப்பிடப்பட்டு பயிற்சி பெறும் 100 பெண்களுக்கும் ரூ.1 கோடி நிதியை தமிழக அரசு வழங்கியது.
இந்த பயிற்சியை முடித்த பெண்களில் முதற்கட்டமாக 10 பெண்களுக்கு தலா ரூ.10,000 சம்பளத்தில் வேலைக்கான பணி நியமன உத்தரவை திமுக எம்பி கனிமொழி வழங்கினார். இது தவிர ஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற 88 பேருக்கு தலா ரூ.25,000 வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கனிமொழி பேசுகையில், விமான பணிப்பெண் பயிற்சி என்பது மேல்தட்டு மக்களுக்கு என்ற நிலையை மாற்றி கீழ்தட்டு மக்களும் பயன் பெறலாம் என்ற நிலை வந்துள்ளது.
தமிழக அரசின் மூலம் தலித் மக்களுக்கு தொடர்ந்து பலன்கள் கிடைத்துக் கொண்டிருக்கும். எனவே நீங்கள் மனம் தளராமல் பணியாற்றுங்கள் என்றார்.
இந்த வருடம் 100 ஆதி திராவிட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த ஆண்களுக்கு கேபின் க்ரூ பணிக்கு இலவச பயிற்சியும், 100 பெண்களுக்கு விமானப் பணிப்பெண் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.2 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சேது-தூத்துக்குடி வரும் கனிமொழி:
இந் நிலையில் சேது சமுத்திரத் திட்டம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற கனிமொழி நாளை தூத்துக்குடி வருகிறார்.
வ.உ.சி கல்லூரி கலையரங்கில் இந்திய சமூக விஞ்ஞான கழகம் சார்பில், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமா, நிராகரிக்கப்பட வேண்டுமா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இதில் கனிமொழி பங்கேற்று திட்டத்துக்காக பேசவுள்ளார்.