லூசியானா ஆளுநரான இந்தியர்
வாஷிங்டன்:
இந்திய வம்சவாளியைச் சேர்ந்த பாபி ஜிந்தால், அமெரிக்காவின் லூசியானா மாகாண ஆளுநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க மாகாணம் ஒன்றின் ஆளுநர் பதவிக்கு இந்திய-அமெரிக்கர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
36 வயதே ஆகும் ஜிந்தால், குடியரசுக் கட்சி சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்த இவரது பெற்றோர் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் செட்டில் ஆனார்கள்.
1971ம் ஆண்டு லூசியானாவில் பிறந்த பாபி ஜிந்தால், மிகவும் இளம் வயதில் அரசியலில் நுழைந்தவர். 2001ம் ஆண்டு அதிபர் ஜார்ஜ் புஷ் ஜிந்தாலை, சுகாதாரம் மற்றும் மனித வள சேவைத் துறையின் இணைச் செயலாளராக நியமித்தார்.
2003ம் ஆண்டு நடந்த லூசியானா மாகாண ஆளுநர் தேர்தலில் ஜிந்தால் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். இருப்பினும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்தார்.
2004ம் ஆண்டு நடந்த அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இந்த நிலையில் கடந்த 20ம் தேதி லூசியானா மாகாண ஆளுநர் தேர்தல் நடந்தது.
இதில் பாபி ஜிந்தால் போட்டியிட்டார். அவருடன் மேலும் 11 பேர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் ஜிந்தால் மொத்தம் பதிவான வாக்குகளில் 53 சதவீத வாக்குகளை (6,25,036 வாக்குகள்) பெற்று அபார வெற்றி பெற்றார்.
மிகவும் இளம் வயதில் ஆளுநர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமையையும் இந்த வெற்றியின் மூலம் ஜிந்தால் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற பின்னர் தனது மனைவி சுப்ரியாவுடன் செய்தியாளர்களிடம் ஜிந்தால் பேசுகையில், எனது தந்தையும், தாயும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் கோட்லாவிலிருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து வந்தனர். அமெரிக்கர்களாக வாழ வேண்டும் என்ற கனவுடன் அவர்கள் வந்தனர். இன்று அவர்களின் கனவு என் மூலமாக நிறைவேறியுள்ளது.
லூசியானா மாகாணத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தீவிரமாக பாடுபடுவேன். அனைவரின் ஒத்துழைப்போடும் அதை சாதிப்பேன் என்றார் ஜிந்தால்.












Click it and Unblock the Notifications