லாரி ஸ்டிரைக் மோசமடைகிறது - பல கோடி இழப்பு
கேரளா: கேரளாவில் நடந்து வரும் லாரி ஸ்டிரைக் காரணமாக, தமிழக வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி பல கோடி இழப்பு ஏற்பட்டு வருவதால் வர்த்தகர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
கேரளாவில் கடந்த 4 நாட்களாக லாரி ஸ்டிரைக் நடந்து வருகிறது. இதனால் தமிழக லாரிகள் கேரளா செல்ல முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து லாரிகளும் கேரள எல்லையையொட்டிய தமிழகப் பகுதிகளில் நிற்கின்றன. இந்த ஸ்டிரைக் காரணமாக தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்ல வேண்டிய காய்கறிகள், இறைச்சி, பூக்கள், முட்டைகள் உள்ளிட்ட அனைத்துமே போக முடியாமல், தேங்கிக் கிடக்கின்றன.
லாரிகள் கேரளாவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால் கோவை, கன்னியாகுமரி, நாமக்கல் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் உள்ளிட்ட பிற மாவட்ட வர்த்தகர்களுக்கும் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் இதுவரை ரூ. 10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுதானந்தன் எச்சரிக்கை:
இதற்கிடையே, லாரி உரிமையாளர்கள், தங்களுடைய வேலை நிறுத்தத்தை திரும்ப பெறாவிட்டால் அவர்களின் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வரும் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை திரும்ப பெற்று லாரிகளை இயக்க முன்வர வேண்டும். அப்படி இல்லையெனில், ஸ்டிரைக்கில் ஈடுபடும் லாரிகள் அனைத்தும் அரசால் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications