சேது கமிட்டியை கலைக்க கோரிய சுவாமி மனு தள்ளுபடி
டெல்லி: சேது சமுத்திரத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட 10 உறுப்பினர் கமிட்டியை கலைக்கக் கோரி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்து தள்ளுபடி செய்து விட்டது.
ராமர் பாலத்தை பாழ்படுத்தாமல், சேது சமுத்திரத் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து ஆராய 10 உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டியை மத்திய அரசு அமைத்துள்ளது.
ஆனால் இந்தக் கமிட்டியின் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் மேலும் இரு உறுப்பினர்கள், ராமருக்கும், ராமர் பாலத்திற்கும் எதிரான கருத்தைக் கொண்டவர்கள். எனவே இப்படிப்பட்டவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரை நியாயமானதாக இருக்காது. எனவே இதை கலைக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியம் சுவாமி நேற்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த பின்னர் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறுகையில், இது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கமிட்டி அல்ல. அரசின் நடவடிக்கையில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி சுவாமியின் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டனர்.












Click it and Unblock the Notifications