நீதிமன்றத்தில் ஆஜரான 'சந்திரமுகி' ஆடு!!
சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் 'சந்திரமுகி' என்ற பெயர் கொண்ட வெள்ளாடு ஆஜர் செய்யப்பட்டதால் கோர்ட்டில் சலசலப்பு ஏற்பட்டது.
நாசரேத் அருகேயுள்ள வகுத்தான் குப்பத்தை சேர்ந்தவர் ஜெயபாண்டி மகன் விஜயகான்டீபன். இவர் சந்திரமுகி என்ற பெயரில் வெள்ளாடு ஒன்றை வளர்த்து வந்தார்.
கடந்த வாரம் இந்த ஆட்டை மங்களகுறிச்சியைச் சேர்ந்த பால் பாண்டி மகன் மணி என்பவர் திருடி சென்று விட்டார்.
இது குறித்து நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் முப்புடாதி வழக்கு பதிவு செய்து மணியைக் கைது செய்து சத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். ஆனால் 'சந்திரமுகி'யைக் காணவில்லை.
அதை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது ஒரு காட்டுப் பகுதியில் சந்திரமுகி ஜாலியாக மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதைப் பிடித்து கோர்ட்டுக்குக் கூட்டி வந்து ஆஜர்படுத்தினர்.
நீதிபதி ஜாய்ஜோசப் இந்த வழக்கை விசாரணை செய்து, மாதந்தோறும் ஆட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் எனக் கூறி விஜய காண்டீபனிடம் சந்திரமுகியை ஒப்படைக்க உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் ஆடு ஆஜர்படுத்தப்பட்டதாலும், சந்திரமுகி என்ற பெயர் கொண்டிருந்ததாலும் கோர்ட்டில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.