ஜாதிக் கலவரத்தை தூண்ட சதி-திருமாவளவன்
சென்னை: தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரத்தைத் தூண்டிவிட சதி நடப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரையில் அம்பேத்கார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரியார் சிலை முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.
அப்போது நிருபர்களிடம் திருமா கூறியதாவது:
மதுரை அவனியாபுரம் மாநகராட்சி காலனியில் உள்ள அம்பேத்கார் சிலையின் கை பகுதியை உடைத்து சேதப்படுத்தி செருப்பு மாலை அணிவித்து அவமதித்திருக்கிறார்கள்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நேரத்தில் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது.
இதன் மூலம் தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரத்தை தூண்டிவிட வன்முறை கும்பல் சதித்திட்டம் தீட்டுது தெளிவாகத் தெரிகிறது. எனவே இந்த அவமதிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.
தென் மாவட்டங்களில் உள்ள அம்பேத்கார் சிலைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.
இத்தகைய செயல்கள் மீண்டும் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தலித் சமூகத்தினர் கலந்து கொண்டனர். அம்பேத்கார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.