செக்ஸ் கல்விக்கு 11 மாநிலங்கள் எதிர்ப்பு: வெங்கையா
சென்னை: பள்ளிக்கூடங்களில் செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்த 11 மாநிலங்களில் எதிர்ப்பு நிலவுவதாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவரான மூத்த பாஜக தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
பள்ளிக் கூடங்களில் செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு ஒரு சாரார் எதிர்ப்பும், இன்னொரு சாரார் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இதனால் செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்தலாமா, கூடாதா என்பதை அறிய நாடாளுமன்ற எம்.பிக்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக மூத்த பாஜக தலைவர் வெங்கையா நாயுடு செயல்படுகிறார்.
இக்குழு நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கூடங்களுக்கு ேநரடியாக சென்று ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து வருகிறது.
நேற்று இக்குழு சென்னைக்கு வந்து கருத்தறிந்தது. நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்குச் சென்ற இக்குழு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பேசி அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது. இதுதவிர அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மத அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருடனும் பேசி அவர்களின் கருத்துக்களையும் கேட்டது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் செக்ஸ் கல்விக்கு பரவலான வரவேற்பு தெரிவித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு செக்ஸ் விழிப்புணர்வு ஏற்படும், தவறான கருத்துக்கள் மறைய உதவும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பெற்றோர்கள் மத்தியில், செக்ஸ் கல்விக்கு எதிர்ப்பும், அதிருப்தியும் காணப்பட்டது. அதேபோல மத அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதை எதிர்த்தனர். இதனால் இந்தியக் கலாச்சாரம் பாதிக்கப்படும், தமிழ் கலாச்சாரம் பாதிக்கப்படும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
கருத்துக் கேட்பை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் வெங்கையா நாயுடு பேசுகையில், செக்ஸ் கல்வியை பள்ளி அளவில் அறிமுகப்படுத்த 11 மாநிலங்களில் எதிர்ப்பு நிலவுகிறது.
இன்னும் 15 நாட்களில் இந்தக் கருத்துக் கேட்பை முடித்து விடுவோம். அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்போம். பின்னர் அதன் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும். அதன் அடிப்படையில் மத்திய அரசு தனது கொள்கை முடிவை வகுக்கும் என்றார் வெங்கையா நாயுடு.












Click it and Unblock the Notifications