குடிபோதையில் பெண் எஸ்ஐயிடம் ரகளை-அதிமுகவினர், கரூர் எம்எல்ஏ கைது!
கரூர்: கரூரில் குடிபோதையில் பெண் போலீசாரிடம் பிரச்சனை செய்த அதிமுகவினரும் எம்எல்ஏ செந்தில் பாலாஜியும் கைது செய்யப்பட்டனர்.
கரூர் எம்எல்ஏவான செந்தில் பாலாஜி அக் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். இவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் தோகமலைக்கு ஒரு விழாவிற்கு சென்று விட்டு கரூர் திரும்பிக் கொண்டிருந்தார்.
செந்தில் பாலாஜி ஒரு காரிலும் அவரைத் தொடர்ந்து இன்னொரு காரில் அவரது ஆதரவாளர்கள் சிலரும் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் மது அருந்தி இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது புலியூர் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிந்தனர். எம்எல்ஏவின் காரை விட்டுவிட்ட போலீசார் அதிமுகவினரின் காரை சோதனையிட்டனர்.
அப்போது குடிபோதையில் கார் ஓட்டிய அதிமுகவினர் மீது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. வழக்கு பதிவு செய்ய முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சுமதியை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் அதிமுவினர்க்கும், சுமதிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து எம்எல்ஏவுக்கு செல்போன் மூலம் அதிமுகவினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து திரும்பி வந்த எம்எல்ஏ செந்தில் பாலாஜி அவர்களை விடுவிக்குமாறு சுமதியிடம் கூறினார். ஆனால் இதை ஏற்க சுமதி மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து எம்எல்ஏ செந்தில் பாலாஜியும் அவரது ஆதரவாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் எஸ்பி சண்முகவேல் சம்பவ இடத்திறகு வந்தார். எம்எல்ஏ செந்தில் பாலாஜியுடன் பேச்சு நடத்திய அவர் அதிமுகவினரை கலைந்து போகுமாறு கூறினார்.
அதை எம்எல்ஏவும் அதிமுகவினரும் ஏற்க மறுக்கவே அவர்களை கைது செய்ய எஸ்பி உத்தரவிட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜி உள்ளிட்ட அதிமுவை சேர்ந்த சுமார் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை ஆயுதப்படை வளாகத்தில் இரவு 10 மணி வரை அடைத்து வைத்திருந்தனர் போலீசார். இத் தகவல் பரவவே சுமார் 300கும் மேற்பட்ட அதிமுவினர் ஆயுதப்படை வளாகத்தின் முன் குவிந்தனர். அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து இரவு 10 மணிக்கு மேல் எம்எல்ஏ செந்தில் பாலாஜியும் அவரது ஆதரவாளர்களையும் கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஜெயந்தி முன் போலீசார் ஆஜர்படுத்தினர்.
அவர்கள் அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார்.
ஆனால் எஸ்.ஐ. சுமதி வழக்கு பதிவு செய்யாமல் இருக்க பணம் கேட்தாகவும், தர மறுத்தால் தங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார் என்றும் எம்எல்ஏ செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் மதுரையில் அமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவில் கத்தியுடன் ஒரு நபர் நுழைந்தார். அதனால் தான் இன்று கரூர் வரும் ஸ்டாலினின் வருகைக்காக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications