சிறப்புப் பொதுப் பட்டியல் என்றால் என்ன? நீட் பிரச்சனைக்கு விஜய் முன்வைக்கும் புதிய அரசியல் தீர்வு!
டெல்லி: டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதல்வருமான விஜய் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அந்த அறிக்கையில், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநிலங்களின் கல்வி உரிமையை மீட்பதே இதற்கு நிரந்தரத் தீர்வு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, நீட் பிரச்சனைக்கு ஒரு இடைக்காலத் தீர்வாக சிறப்புப் பொதுப் பட்டியல் உருவாக்கப்பட வேண்டும் என்ற புதிய அரசியலமைப்பு முன்மொழிவை விஜய் அளித்துள்ளார்..

இந்த முன்மொழிவின் பின்னணி
இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின்படி, அதிகாரங்கள் மூன்று பட்டியல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
மத்தியப் பட்டியல் அதாவது Union List - மத்திய அரசின் முழு அதிகார வரம்பு.
மாநிலப் பட்டியல் அதாவது State List - மாநில அரசுகளின் முழு அதிகார வரம்பு.
பொதுப் பட்டியல் அதாவது Concurrent List - மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் சட்டம் இயற்றலாம்.
1976-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை கல்வி என்பது முழுமையாக மாநிலப் பட்டியலில் இருந்தது. ஆனால், 42-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
பொதுப் பட்டியலில் உள்ள ஒரு துறையில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே முரண்பாடு ஏற்படும் போது, அரசியலமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசின் சட்டமே செல்லுபடியாகும்.. இதன் காரணமாகவே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினாலும், அதற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற முடிவதில்லை.
விஜய்யின் சிறப்புப் பொதுப் பட்டியல் கணக்கு என்ன?
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதுதான் நிரந்தரத் தீர்வு என்றாலும், அதற்குப் பல அரசியலமைப்புச் சட்ட நடைமுறைச் சிக்கல்களும், நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதலும் தேவைப்படும்.
இந்தச் சட்டச் சிக்கல்களைக் கடக்க, ஒரு இடைக்கால ஏற்பாடாக சிறப்புப் பொதுப் பட்டியலை (Special Concurrent List) உருவாக்கலாம் என்பது தவெகவின் முன்மொழிவு.
முழு அதிகாரப் பங்கீடு
சிறப்புப் பொதுப் பட்டியலில் கல்வி சேர்க்கப்படும் போது, பொதுப் பட்டியலில் இருப்பது போல மத்திய அரசின் சட்டம் மாநிலத்தின் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படாது.
மாநில அரசுகளின் விலக்கு உரிமை
இப்பட்டியலின் கீழ், கல்வி மற்றும் மருத்துவக் கல்வியில் முழுமையான முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே வழங்கப்படும். AIIMS, JIPMER போன்ற மத்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு நுழைவுத் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம்.
ஆனால், மாநில அரசு நிதியில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு தேவையா இல்லையா என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம்.
சமரசமற்ற நிலைப்பாடு
மாநிலங்களின் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கவும், ஒரே நாடு - ஒரே தேர்வு முறையால் கிராமப்புற மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பாதிப்படைவதைத் தடுக்கவும் இதுவே உடனடித் தீர்வு என விஜய் கருதுகிறார். இதன் காரண்மாகவே நீட் பிரச்சனைக்கு ஒரு இடைக்காலத் தீர்வாக சிறப்புப் பொதுப் பட்டியல் உருவாக்கப்பட வேண்டும் என்ற புதிய அரசியலமைப்பு முன்மொழிவை விஜய் அளித்துள்ளார்..














Click it and Unblock the Notifications