போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த கொழும்பு தமிழர் கைது
சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் லண்டன் செல்ல முயன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இலங்கைத் தலைநகர் கொழும்பு அருகே உள்ள வெள்ளவத்தை என்ற இடத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (37). இவர் நேற்று காலை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம், சென்னையிலிருந்து லண்டன் செல்ல வந்திருந்தார்.
அங்கு குடியேற்றத் துறை அதிகாரிகள், அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சோதனையிட்டபோது, தேவேந்திரன் வைத்திருந்த பாஸ்போர்ட் போலியானது என்பது தெரிய வந்தது.
இன்னொருவரின் பாஸ்போர்ட்டில், தனது புகைப்படத்தை ஒட்டி அதன் மூலம் லண்டன் செல்ல முயன்றுள்ளார் தேவேந்திரன். இதையடுத்து அவரை விமான நிலைய போலீஸாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் தேவேந்திரன் ஒப்படைக்கப்பட்டார். அவரைக் கைது செய்த போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
தேவேந்திரன் அக்டோபர் 4ம் தேதி லங்கன் ஏர்வேஸ் விமானம் மூலம் கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்தார். அப்போதும் அவர் போலி பாஸ்போர்ட்டைத்தான் பயன்படுத்தியுள்ளார். ஆனால் அதிகாரிகளின் கண்ணிலிருந்து தப்பி விட்டார்.
போலி பாஸ்போர்ட்டுகளைக் கண்டுபிடிக்கும் அதி நவீன வசதிகள் இருந்தும் எப்படி தேவேந்திரன் தப்பினார் என்பது குறித்து குடியேற்றத் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்ததும், திருப்பதி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு தேவேந்திரன் சென்றுள்ளார். அவருக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தொடர்பு இருக்குமா என்ற ரீதியில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் கியூ பிரிவு அதிகாரிகளும் தற்போது இணைந்துள்ளனர். தேவேந்திரன் எங்கெங்கு சென்றார், அங்கு யாரையெல்லாம் பார்த்தார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.