விமானத் தாக்குதலில் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி
கிளிநொச்சி: கிளிநொச்சியில் இன்று காலை இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் பலியானார்.
முல்லைத்தீவில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகள் மீது நேற்று இலங்கை விமானப்படை கடும் தாக்குதல் நடத்தியது. இதில் முக்கிய பயிற்சி முகாம் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை கிளிநொச்சியில் இலங்கை விமானப்படை விமானங்கள் முக்கிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தின. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களின் வீடுகள் உள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச் செல்வன் பலியானார். இத் தகவலை விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமையக பொதுச் செயலாளர் சீரன் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று காலை 6 மணிக்கு இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில், அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் மரணமடைந்தார்.
அவருடன் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், நேதாஜி, அடைக்கவேல், வாகைகுமாரன் ஆகியோரும் பலியானார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சுப. தமிழ்ச் செல்வன், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக பொறுப்பேற்றார். அதன் நார்வே தூதுக்குழுவின் ஏற்பாட்டின் பேரில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் அமைப்பின் சார்பில் சென்ற குழுக்களுக்கு தமிழ்ச் செல்வ
னே தலைமை தாங்கிச் சென்றார்.
விமானத் தாக்குதலில் தமிழ்ச்செல்வன் பலியானது விடுதலைப் புலிகளுக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.
இலங்கை விமானப்படை வீரர்கள் தாக்குதல் நடத்திய இடத்தில் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கூடியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் யார் யார் அங்கு இருந்தனர் என்று தெரியவில்லை.
அதி நவீன ஜெட் விமானங்கள் மூலம் இந்த தாக்குதலை விமானப்படை நடத்தியுள்ளது. மொத்தம் 2 முறை குண்டு வீசித் தாக்கியுள்ளனர்.
இந்தப் பகுதியை நீண்ட நாட்களாகவே கண்காணித்து வந்து, தலைவர்கள் கூடும் நேரமாக பார்த்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த இடங்களில், இரணமடு பகுதியில் உள்ள துரையாறு என்ற பகுதியும் ஒன்று. இங்கு கருப்பு புலிகளின் (தற்கொலைப் படைப் பிரிவு) முக்கிய நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாக்குதலில் இந்த நிலை முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிகிறது.
மோதலில் கொல்லப்பட்டுள்ள அன்புமணி என்கிற அலெக்ஸ், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் லெப்டினென்ட் கர்னல் அந்தஸ்து வழங்கப்பட்டவர். போர் உத்திகளை வகுக்கும் பிரிவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகராக இருந்த, சமீபத்தில் மறைந்த ஆண்டன் பாலசிங்கத்திற்குப் பிறகு புலிகள் அமைப்பின் சர்வதேச பிரதிநிதியாக செயல்பட்டு வந்தவர் தமிழ்ச் செல்வன்.
அவருக்கு புலிகள் அமைப்பில் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்த இடம் கொடுக்கப்பட்டிருந்தது. புலிகள் அமைப்பின் உயரிய பட்டங்களில் ஒன்றான பிரிகேடியர் என்ற பட்டமும் தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications