திமுக அணியிலிருந்து விலகுவோம்; 2011ல் ஆட்சியைப் பிடிப்போம் - ராமதாஸ்
சென்னை:2011ம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் பாமக தலைமையில் புதிய கூட்டணி உருவாவது நிச்சயம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மும்பை உயர்நீதிமன்றத்தின் பெயரை மகாராஷ்டிரா உயர்நீதிமன்றம் என மாற்ற வேண்டும் என அம்மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.
எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரையும் மாற்ற வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் தற்போது மதுரையிலும் செயல்பட்டு வருகிறது. எனவே இரண்டுக்கும் பொதுவாக, சென்னை உயர்நீதிமன்றம் என்ற பெயரை, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் சென்னை, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் மதுரை என மாற்ற வேண்டும். இதுதொடர்பான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
தொகுதி மறு சீரமைப்புப் பணிகள் முடிவடையாததால், அரியலூர் தனி மாவட்டமாக செயல்படுவதில் சிக்கல் இருப்பதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். தற்போது அந்த சிக்கல் நீங்கி விட்டதால், அரியலூரை மறுபடியும் தனி மாவட்டமாக செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2011ம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலின்போது பாமக தலைமையில் தனி அணி அமையும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். கண்டிப்பாக அது உருவாகும். அத்தோடு நில்லாமல் ஆட்சியையும் பிடிப்போம். அதில் பாமக உறுதியாக உள்ளது.
தற்ேபாதுள்ள திமுக அரசு தனது முழுப் பதவிக்காலத்தையும் முடிக்க நாங்கள் ஆதரவு தருவோம். 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது திமுக அணியிலிருந்து நாங்கள் விலகி விடுவோம். தனி அணி அமைப்போம்.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது தனி அணியை பாமக அமைக்கும். 1960ம் ஆண்டிலிருந்து இந்த இரு கட்சிகளும்தான் மாறி மாறி தமிழகத்தை ஆண்டு வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும்.
எங்களிடம் நிறைய திட்டங்கள் உள்ளன. அவற்றை அமல்படுத்த போதிய அவகாசம் உள்ளது. தேர்தல் நேரத்தின்போது அவற்றை வெளிப்படுத்துவோம். எப்போது திமுக அணியிலிருந்து விலகுவோம் என்பதை இப்போது சொல்ல முடியாது.
2011ல் பாமக ஆட்சியைப் பிடிக்க வாழ்த்துவதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் அதை எந்த தொணியில் கூறினார் என்பத குறித்து எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் அதை நாங்கள் சரியான தொணியில்தான் எடுத்துக் கொண்டுள்ளோம்.
கருணாநிதியின் வாழ்த்தை பிரம்ம ரிஷியிடமிருந்து பெற்ற ஆசியாக எடுத்துக் கொள்கிறோம். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது பாமகவின் நிராசை அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்களது கொள்கைகள், திட்டங்களில் அது ஊடுறுவியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் மாதிரி பட்ஜெட்டை வெளியிட்டு வருகிறோம். 2020ம் ஆண்டுக்குள் தமிழம் வளம் பெறுவதற்கான திட்டங்களை வழங்கியுள்ளோம். தொழில் கொள்கையை பரிந்துரைத்துள்ளோம். விவசாய, ஊரக வளர்ச்சிக்கான கொள்கைகளை வெளியிட்டுள்ளோம்.
இப்படி தமிழகத்தின் நலனுக்காக உழைத்துக் கொண்டிருக்கும், யோசித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதில் எந்தத் தவறும் இல்லை.
மேலும் சமீபத்தில் கூட மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அடுத்த சட்டசபைத் தேர்தலை பாமக தனியாக சந்திக்கட்டும் என்று கூறியிருந்தார். அதை முதல்வர் கருணாநிதியும் கூட அங்கீகரித்திருந்தார். எனவே நாங்கள் 2011ல் ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறுவதில் தவறில்லை.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அணியில் பாமக இடம்பெறும். எங்களது மாற்று அணித் திட்டத்திலும் கூட காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய இடம் உள்ளது என்றார் ராமதாஸ்.
திமுக அணியிலிருந்து விலகுவோம், திமுக - அதிமுகவுக்கு மாற்றாக புதிய அணியை உருவாக்குவோம், அதில் காங்கிரஸ் முக்கிய கட்சியாக இருக்கும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications