காவல் நிலையத்தைத் தாக்கிய பொதுமக்கள் - போலீஸ் தடியடி
மணப்பாறை: கள்ளக்காதல் பிரச்சனையில் வாலிபர் இறந்தது தொடர்பாக காவல் நிலையத்தை முற்றுகையிட்டவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர். இந்த மோதல் தொடர்பாக திமுக பிரமுகர் உட்பட 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். பல் டாக்டரான இவருக்கு சத்யமூர்த்தி (35) என்ற மகன் இருந்தார். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.
சத்யமூர்த்தி தனது தந்தையின் மருத்துவமனையிலேயே உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், கல்லாத்துப்பட்டியை சேர்ந்த கலாமதிக்கும், சத்தியமூர்த்திக்கும் இடையை கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அவரையும் தனது மனைவியாக பாவித்து வாழ்ந்து வந்தார் சத்தியமூர்த்தி. கலாமதியின் கணவர் சமீபத்தில் இறந்துவிட்டார்.
இந்த நிலையில், சத்யமூர்த்தி, தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தீபாவளிக்கு புதிய உடைகள் எடுத்தார். அதேபோல கலாமதி, அவரது குழந்தைகளுக்கும் டிரஸ் எடுத்தார்.
இந்த நிலையில் கலாமதிக்கும், சத்யமூர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் சண்டை போட்டுள்ளனர். விரக்தி அடைந்த சத்யமூர்த்தி கலாமதியின் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக கலாமதி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் செய்தார். சத்யமூர்த்தி தூக்கில் தொங்கிய சம்பவம் பரவியதும், சத்யமூர்த்தியின் மனைவி சிவகாமி, அவருடைய தம்பி மோகன்தாஸ், மணப்பாறை திமுக நகர அவைத் தலைவர் இளங்கோ மற்றும் சத்யமூர்த்தியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர்.
சத்யமூர்த்தியின் சாவில் மர்மம் உள்ளது. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினர். சத்யமூர்த்தியின் உறவினர்களிடம் மணப்பாறை காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அவர்கள் அதைக் கேட்காமல், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி ராஜசேகரன் மற்றும் உயர் அதிகாரிகள் வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனாலும் சத்யமூர்த்தியின் உறவினர்கள் போலீசாரின் சமாதானத்தை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து, போராட்டம் நடத்திய திமுக அவைத்தலைவர் இளங்கோ, சத்தியமூர்த்தி மனைவி சிவகாமி, தம்பி மோகன்தாஸ் உட்பட 37 பேரை கைது செய்தனர்.
கலாமதியையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications