போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஜஸ்வந்த் சிங் மீது வழக்கு
ஜோத்பூர்: முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் ஓபியம் போதைப் பொருள் பரிமாறப்பட்டது தொடர்பாக ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட 10 பேர் மீது விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள ஜசோல் கிராமம், ஜஸ்வந்த் சிங்கின் சாந்த ஊர் ஆகும். இங்கு கடந்த வாரம் ஜஸ்வந்த் சிங் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் ராஜஸ்தான் கல்வி அமைச்சர் கன்ஷியாம் திவாரி, நலத்துறை அமைச்சர் மதன் தில்வார், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத்தின் மருமகனும், தொழில்துறை அமைச்சருமான நர்பத் சிங் ராஜ்வி, அரசு தலைமைக் கொறடா மகாவீர் பிரசாத் ஜெயின், பாஜக தேசிய துணைத் தலைவர் கைலாஷ் மேக்வால், முன்னாள் மாநில பாஜக தலைவர்கள் லலித் கிஷோர் சதுர்வேதி, ரகுபீர் சிங் கெளஷல், எம்.எல்.ஏக்கள் சங்கர் சிங் ராஜ்புரோஹித், ஜோகேஷ்வர் கார்க் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் ஓபியம் போதைப் பொருள் பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 கிராமுக்கு மேற்பட்ட ஓபியம் பயன்படுத்துவது குற்றச் செயலாகும். இது நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.
ஜஸ்வந்த் சிங் கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் ஓபியம் வழங்கப்பட்டது குறித்து ஜோத்பூரைச் சேர்ந்த பிஷ்னாய் என்பவர் பலோத்ரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் சட்டத்தை மீறி நடந்து கொண்டுள்ளார். போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தை அவரும், விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 9 பாஜக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீறியுள்ளனர்.
பொறுப்பான பதவியை வகித்துள்ள ஜஸ்வந்த் சிங் ஓபியம் பயன்படுத்தியுள்ளார். இது மிகவும் தவறானதாகும். இதுகுறித்து புகார் கொடுத்தும் கூட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஜஸ்வந்த் சிங் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட 10 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
ஜஸ்வந்த் சிங், 3 எம்.பிக்கள், 3 அமைச்சர்கள், அரசு கொறடா, 2 எம்.எல்.ஏக்கள் ஆகியோர் மீது ஓபியம் சர்ச்சை எழுந்துள்ளது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் அனைவருமே ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு எதிரான கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்.