காதலுக்காக சொத்து, பெற்றோர்களை உதறிய மாணவி!
மதுரை: சொத்து, பெற்றோர்களை உதறி விட்டு காதலரைக் கைப்பிடித்தார் கல்லூரி மாணவி.
மதுரை, திருமங்கலம் மாயோன் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மதுரையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற (23 ) மகள் உள்ளார்.
கள்ளிகுடி குராயூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் கண்ணன் (25). இவரும், லட்சுமியும், திருநகரில் உள்ள கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் படித்து வருகின்றனர்.
அடிக்கடி பாடம் சம்பந்தமாக பேசுவது வழக்கம். அதுவே காதலாக மாறி விட்டது. இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். இதற்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் இருவரும் வீட்டை விட்டு சென்று யாருக்கும் தெரியாமல் கள்ளிக்குடியில் அலைபாயுதே ஸ்டைலில் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனாலும் வழக்கம் போல் அவரவர் வீட்டில் இருந்தபடி கல்லூரிக்கு சென்று வந்தனர். இந்நிலையில் இந்த காதல் ஜோடி தாங்கள் குடும்பம் நடத்த பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறி அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது.
அவர்கள் காதல் ஜோடியை திருமங்கலம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். காதல் ஜோடிகளை தேடி கலைத்துப்போன இரு வீட்டு பெற்றோர்களும், உறவினர்களும் தகவல் அறிந்து திருமங்கலம் காவல் நிலையத்தின் முன்பு குவிந்தனர்.
இரு வீட்டாரிடமும் திருமங்கலம் டிஎஸ்பி ஷாஜகான் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பலன் இல்லை. வாழ்ந்தால் காதலனுடன் தான் வாழ்வேன். செத்தாலும் காதலனுடன் தான் சாவேன் என லட்சுமி கூறி விட்டார். மேலும் தனது பெற்றோர்களுடன் செல்லவும் மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த லட்சுமியின் பெற்றோர், அப்படியானால் சொத்தில் லட்சுமி பங்கு எதுவும் கேட்கக் கூடாது, கேட்க மாட்டேன் என எழுதித் தர வேண்டும் என்று கூறினர்.
அதன்படியே எனக்கு சொத்து எதுவும் வேண்டாம் என எழுதிக் கொடுத்து விட்டு கணவருடன் போய் விட்டார் லட்சுமி.