அரசு ஊழியர்களின் 'தீபாவளி வசூல்': வர்த்தகர்கள் அலறல்
தென்காசி: தீபாவளி பண்டிகையையொட்டி அரசு துறை ஊழியர்களின் வசூல் வேட்டையால் வர்த்தகர்கள் நொந்து போயுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் தென்காசி பஜாரில் கடைகளின் வாடகை அதிமாக உள்ளது. 500 சதுர அடி உள்ள இடத்திற்கு சர்வ சதாரணமாக ரூ.10,000 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.
உயர்ந்துவிட்ட மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், ஊழியர்களின் சம்பளம், தொழில்வரி, நன்கொடைகள் ஆகியவற்றால் வர்த்தகர்கள் திண்டாடிவரும் நிலையில் தற்போது தீபாவளி வசூல் பெயரில் அரசு துறையினரின் நடவடிக்கைகளால் பஜார் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வணிக வரித்துறையினர், தீயணைப்பு துறையினர், வருமான வரித்துறையினர், வனத்துறையினர் ஆகியோரின் வரிசையாக வசூல் வேட்டை நடத்துவதால் தென்காசி பஜாரில் உள்ள வியாபாரிகள் கடையை பூட்டிவிட்டு சென்றுவிடலாமா என்ற எண்ணத்தில் இருக்கிறார்களாம்.
தீபாவளி பண்டிகையை காரணமாக வைத்து பதிவுத்துறை, செக்போஸ்ட்கள் போன்றவற்றில் கெடுபிடி வசூல் செய்யபடுவதாக புகார் எழுந்துள்ளது. பதிவுத்துறையிலும் இது போன்ற பண்டிகை காலங்களில் லஞ்சம் வாங்குவது அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க லஞ்ச ஓழிப்பு துறை தனிப்படையினர் கடந்த ஆண்டுகளில் பலமுறை அதிரடி ரெய்டு நடத்திய நிலையிலும் இதனை கட்டுபடுத்த முடியவில்லை.
கடந்த ஆண்டு பத்திரப் பதிவு அலுவலகத்தில் இதே போன்று தீபாவளியை ஒட்டி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசு துறையினரின் வசூல் வேட்டையால் பஜார் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலை தென்காசி மட்டுமல்ல. தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் அரசு ஊழியர்களின் வசூல் வேட்டையால் வர்த்தகர்கள் நொந்து போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications